ஜெ., நலம் பெற வேண்டி கர்நாடகாவிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணம் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து லட்சுமி பதி என்பவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணமாக வந்தடைந்தார்.
சென்னை அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் நலம் பெற அப்பல்லோ மருத்துமனை முன்பு சர்வ சமயத்தினரும் பிரார்த்தனை நடத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர், பொது மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் அதிமுக எம்பி விஜயகுமார் தலைமையில் அதிமுகவினர் பால்குடம் எடுத்து வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், கால்களில் ஆணி செருப்பு அணிந்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அதிமுகவினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலுக்கு அதிமுகவினர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இந்த பூஜையில் ராமநாதபுரம் எம்.பி அன்வர் ராஜா, திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல்வர் பூரண உடல் நலம் பெற வேண்டி, கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து லட்சுமி பதி என்பவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணமாக வந்தடைந்தார். 10 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.