பிரபல நிறுவனத்தின் பேரில் கலப்பட ஆயில் பாக்கெட்கள்... ஆலைக்கு அதிகாரிகள் சீல்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிரபல கம்பெனி தயாரிப்புகளின் பெயரில் போலி பாக்கெட்களில் கலப்பட எண்ணெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, கடம்பூர் மற்றும் சுற்றுபகுதி கிராமங்களில் உள்ள கடைகளில் கலப்பட எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவில்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளை சோதனை செய்தனர்.
அதில் பிரபல நிறுவனங்களின் பெயரி்ல் உள்ள எண்ணெய் பாக்கெட்களில் போலி கலப்பட எண்ணெய் விற்கப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவில்பட்டி மெயின் ரோடு கருவாட்டுபட்டியில் உள்ள ஆலையில் நவீன இயந்திரங்கள் மூலம் கலப்பட எண்ணெய் தயாரித்து பாக்கெட்டில் அடைப்பது கண்டுபிடிக்கப்ட்டது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு குழுவினர் சந்தைபேட்டை தெருவில் உள்ள ஆலைகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அருப்புகோட்டை, சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் இருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயை மொத்தமாக வாங்கி வந்து, அதில் தரம் குறைந்த எண்ணெயை கலப்படம் செய்து மெஷின் மூலம் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து ஆலைகளில் இருந்த கலப்பட எண்ணெய் 1380 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.