பாலில் கலப்படம் உறுதிசெய்தால்.... பால் நிறுவனம் மூடப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - வீடியோ
தனியார் பால் நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பால் நிறுவனம் மூடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.
சென்னை: தனியார் பால் நிறுவனங்களைக் குழு அமைத்துக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தை மூடிவிடுவோம் என பால்வளத் துறை அமைச்சர் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசின் ஆவின் பால் நிறுவனம் மட்டுமில்லாது மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களும் பெரிய அளவில் இயங்கி வருகின்றன. பொதுமக்களும் தங்களின் தேவைக்கு தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றனர்.
தற்போது பால்வளத் துறை அமைச்சர், தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனங்களை கலக்கின்றன என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது தனியார் பால் நிறுவனங்களை கண்காணித்து வருகிறோம். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கண்காணிப்பு குழு அமைத்துள்ளோம்.
இவர்கள் ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களின் பாலில் இருந்து 'மாதிரி' எடுத்து அதனை பரிசோதனை செய்வார்கள். அப்போது பாலில் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தை இழுத்து மூடிவிடுவோம் என கூறினார்.
மேலும் ஆவின் பால்தான் கலப்படமில்லாதது. தனியார் நிறுவனங்களின் பால் சாதரண வெப்பநிலையில் வைத்தால் பல மணிநேரம் கெடாமல் உள்ளது. பால் என்றால் அது திரிய வேண்டும். ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் பாலை கெடாமல் வைப்பதற்கு என்று ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். அந்த பாலை குடிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் உண்டாகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.