பள்ளி பொதுத்தேர்வில் இனி ரேங்க் முறையில்லை.... அரசு அறிவிப்பு மாணவர்களுக்கு நல்லதா? கெட்டதா?
பிளஸ் 2 , 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்த ஆண்டு முதல் 3 ரேங்குகள் கிடையாது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 எனப்படும் பொதுத்தேர்வில் முதல் 3 ரேங்குகள் பற்றி அறிவிக்கப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது குழப்பம் என்று ஒரு சாரார் கூறினாலும் மாணவர்களுக்கு நன்மைதான் என்றும் அவர்களின் மன அழுத்தம் தவிர்க்கப்படும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்களையும், மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவர்களையும் விளம்பர பலகையில் போட்டு கல்வியை வியாபாரப் பொருளாக்கி வந்தனர். இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரேங்க் கிடையாது
மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் 3 மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது என்றும் சிறந்த மாணவர் என்று சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் தெரிவித்தார். இதேபோல் பத்தாம் வகுப்புக்கும் ரேங்க் முறைக் கிடையாது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 ரிசல்ட்
நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இது நாள் வரை முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படும். இந்த ஆண்டு முதல் 3 ரேங்குகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சிறந்த மாணவர் என்று சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எஸ்எம்எஸ் மட்டுமே
மாநில அளவில் மட்டுமல்லாது மாவட்ட அளவிலும் பாட வாரியாக மதிப்பெண்களும் அளிக்கப்பட மாட்டாது என்றும், மதிப்பெண் விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ முறை
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகாது என்றும், பத்தாம் வகுப்பு தேர்வுஅ முடிவிலும் இந்த முறை கடைபிடிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதாவது சிபிஎஸ்இ அறிவிக்கும் முறைபோல் மாநில அரசு கடைபிடிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மதிப்பெண் விபரம்
மாணவர்கள் மதிப்பெண் விவரம், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றும், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தடுக்க புதியமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு ஏமாற்றம்
அரசின் புதிய அறிவிப்பு மாணவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், ரேங்க் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு படித்த மாணவர்களுக்கு இது கஷ்டத்தை கொடுக்கும் என்றும் சில பெற்றோர்கள் கூறியுள்ளனர். மதிப்பெண் வெளியிடா விட்டால் தங்களின் கல்வி திறமையை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கின்றனர் சிலர்.
ரொம்ப நல்ல முறை
நீண்ட நாட்களாக இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த முறை அமல்படுத்தப்படுவது மாணவர்களுக்கு நன்மையே நடக்கும் என்றும் எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளமாறன் கூறியுள்ளார். மாணவர்களின் மீதான அழுத்தம் குறையும் என்றும் மதிப்பெண்களையும், மாணவர்களையும் வைத்து நடைபெறும் வியாபாரம் தடுக்கப்படும் என்பதும் தலைமை ஆசிரியரின் கருத்தாகும்.
எல்லாமே மாற வேண்டும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்தால் போதாது, பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பாடமுறை, இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெரும் வகையில் கல்வித்தரத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் தலைமை ஆசிரியர் இளமாறன் கருத்தாகும்.