தடையை மீறி ஆசிரியர்கள் ஸ்டிரைக்.. அவமதிப்பு வழக்குத் தொடர ஹைகோர்ட் அனுமதி
மதுரை: தடையை மீறி ஸ்டிரைக் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
இந்த நிலையில் ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இந்த அமைப்பினர் புதன்கிழமை சந்தித்து பேசினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தனர். மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்தம் அறிவித்ததை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் இயங்கவில்லை.
அரசு அலுவலகங்களும் பல்வேறு இடங்களில் செயல்படாமல் பூட்டப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும்
வரும் 14-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர் என வழக்கறிஞர் சேகரன் மதுரை கிளை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் விசாரிக்கலாம் என்றனர்.