போலீசார் வன்முறையில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இருக்கிறது.. பாமக வக்கீல் பாலு வழக்கு
Advocate Balu has filed case against police atrocities, it will be inquired in Chennai High Court tomorrow.
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் நேற்று தீ வைப்பு, அடிதடி என வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வன்முறையில் போலீசாரே தீ வைத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் பாலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், ஆட்டோக்கள், குடிசைகள், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.
வன்முறை கலவரத்தின் போது பெண் போலீஸ் ஒருவர் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு ஒரு குடிசைக்கு தீ வைப்பது போன்ற காட்சியும் மற்றொரு போலீஸ் ஆட்டோவிற்கு தீ வைப்பது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளன. மேலும் சாலையின் ஒரத்தில் நின்றிருந்த பெண்களை போலீசார் அடித்து துவைப்பது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வழக்கறிஞர் பாலு, வன்முறையில் போலீஸ் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.