பேருந்துகட்டண உயர்வு... சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் மனுவை வழக்காக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கட்டண உயர்வுக்கு மற்ற மாநிலங்களை காரணமாக சொல்லாமல் தமிழக மக்களுக்கு இதில் என்ன நன்மை என்பதை பார்க்க வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர். அன்றாட பிழைப்புக்கே வாட்டும் விலைவாசி உயர்வால் போராடி வரும் நிலையில் பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பது மக்கள் நலனை பற்றி கவலைப்படாத அரசின் வெளிப்பாடு என்று மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் முன் அறிவிப்பின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் இந்த மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அப்போது மனுவை அவசர வழக்காக விசரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.