ஹாசினி கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை- வழக்கறிஞர் கண்ணதாசன்
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
Recommended Video
செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹாசினி தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இதையடுத்து இந்த வழக்கானது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதுதொடர்பாக இன்று நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஹாசினி பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணதாசன் கூறுகையில் நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் அறிவியல்பூர்வமாக குற்றங்களை நிரூபித்தோம். எனவே தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.