ஜெ. நினைவுநாள் அரசு அனுசரிக்கத் தடையில்லை... மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
ஜெயலலிதா நினைவு நாளை டிசம்பர் 5ல் அரசு அனுசரிக்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : டிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு நாளை அரசு அனுசரிக்க தடை கேட்டு வழக்கறிஞர் குமாரவேலு தாக்கல் செய்த மனுவை சென்னை உர்யநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு அனுசரிப்பதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை அமைதி ஊர்வலமாக சென்று நினைவு நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைதி ஊர்வலத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் வழக்கறிஞர் குமாரவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இறப்பில் சந்தேகம்
ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அரசு விசாரணை நடத்த ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் டிசம்பர் 5ல் தான் ஜெயலலிதா மரணமடைந்தாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
அதிமுகவினர் கொண்டாடலாம்
எனவே அவரது நினைவு தினத்தை டிசம்பர் 5ல் அரசு சார்பில் அனுசரிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் குமாரவேலு தடை கேட்டிருந்தார். அதிமுகவினர் வேண்டுமானால் ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்துக் கொள்ளலாம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவமனை இறப்பு சான்றிதழ்
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரண தேதியை பிரபல மருத்துவமனையே இறப்பு சான்றிதழாக அளித்துள்ளது. மேலும் விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து எந்த சந்தேகத்தையும் தெரிவிக்கவில்லை.
அரசு அனுசரிக்கலாம்
எனவே இத்தகைய சூழலில் ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு அனுசரிக்கத் தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கறிஞரிரன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் நாளை அரசு சார்பில் நினைவு தினம் கொண்டாட இருந்த தடை நீங்கியுள்ளது.