புதிய சட்ட விதிக்கு எதிராக சென்னையை குலுங்க வைத்த வக்கீல்கள் பேரணி! அமைதியாக முடிந்தது
சென்னை: வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வக்கீல்கள் சென்னையில் குவிந்தனர்.
வக்கீல்களாக பதிவு செய்துள்ளவர்கள், நீதிபதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோ அல்லது பேரணிகளை நடத்துவதோ அல்லது நீதிபதிகள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறினாலோ அல்லது மது அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாலோ அவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுத்து அந்த வக்கீல்களை தொழில் செய்ய தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.
வக்கீல்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தம் தமிழக அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்ட விதிகள் திருத்தத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வக்கீல்கள் மீது நேரடியாக உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது வக்கீல்களின் தொழில் உரிமையையும், பேச்சுரிமையையும் பறிப்பதாகும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்ட திருத்தத்தை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர்.
வக்கீல்களின் பேரணி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் தொடங்கி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மதியம் 12.30 மணியளவில் முடிந்தது. பேரணிக்கு, சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ் தலைமை தாங்கினார். பேரணி நிறைவில், உரையாற்றிய அவர், வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வக்கீல்கள் போராட்டம் அமைதியாக முடிந்த நிலையில், சென்னை போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.