இன்று அபூர்வ சந்திர கிரகணம்! மக்கள் கண்டுகளிப்பு!
Recommended Video
சென்னை: இந்தியாவில் இன்று முழு சந்திர கிரகணம் நடைபெற்று வருகிறது.
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்பது அறிவியல்.
இதன்படி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இன்று இந்த நிலவு 'புளு மூன்' என்று அழைக்கப்படும். அதற்காக நிலவு நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் என நினைத்துவிட வேண்டாம்.
நீல வண்ணத்தில் தெரியாது
புளு மூன் என்று அளைக்க ஒரு காரணம் உள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு, 'புளு மூன்' என, அழைக்கப்படுகிறது. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால்தான் இப்படி அழைக்கப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிலையை பொறுத்து, இன்று நிலா ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம். புளு நிறத்தில் காணப்படாது. இந்த வகை அபூர்வ சந்திரகிரஹணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நிகழ்கிறது.
எப்போது தெரியும்?
முழு சந்திர கிரகணம் உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இன்று தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது. சென்னையில், சந்திரன் மாலை, 6:05 மணிக்கு உதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்குமாம். இரவு 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து, 8:43 மணிக்கு முழுமையாக பூமியின் நிழல் விலகிவிடும். இரவு, 9:38 மணிக்குப்பின் நிலவு, முழு ஒளியுடன் பழைய நிலைக்கு திரும்பும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்றை சந்திர கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல், வெறும் கண்களால் பார்க்கலாம்.
பிளட் மூன்
எனவே கிரகணம் தொடங்கிய பிறகு, பெரும்பாலான மக்கள் இரவு 10.30 மணிவரை வெளியே வர கூடாது என்ற முடிவில் உள்ளனர். கிரகணம் முடிந்த பின் நீராடி, சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது என்றபோதிலும் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் சூரிய ஒளியானது, நிலவின் மேல் படும். அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலா சிவப்பாகவும் தோன்றும். ‘பிளட் மூன்' என்று அழைக்கப்படும்.
அலைகள் எழும்பும்
சந்திர கிரகண நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பாடு, தண்ணீர் குடிக்க கூடாது என்பது பல மக்களுக்கு பாரம்பரியமாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணிவரை நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல கோயில்களிலும் சந்திர கிரகண நேரத்தில் நடை சாத்தப்பட்டுள்ளது.