இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மனுஷி சில்லர்... 17 ஆண்டுக்குப் பின் மிஸ் வேல்ட் பட்டம் வென்ற நாயகி!
இந்தியாவிற்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ்வேல்ட் பட்டத்தை வென்று வந்து உலக அரங்கை திரும்பிப் பார்க்க வைத்தார் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர்.
சென்னை : சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மிஸ்வேல்ட் பட்டத்தை வாங்கி வந்து பெருமை சேர்த்தார் ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லர். 2017ம் ஆண்டில் இந்தியாவை மிஸ் வேல்ட் வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த பெருமையும் மனுஷியையே சேரும்.
அரங்கம் அதிரும் கைதட்டல்கள், 2017ம் ஆண்டிற்கான மிஸ் வேல்ட் அறிவிப்பு. மற்ற நாட்டு அழகிகளை பின்னுக்குத் தள்ளி பட்டத்தை இந்தியாவிற்கு பறித்து வந்தார் 20 வயது மனுஷி சில்லர். போட்டியில் பங்கேற்ற 108 நாட்டு அழகிகளை பின்னுக்குத் தள்ளி வசீகரிக்கும் அழகால், தெளிவான பதில்களாலும் அனைத்து சுற்றுகளையும் கடந்து இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றார் மனுஷி.
சீனாவின் தெற்கு சான்யா நகரில் நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த அழகிகளுடன் இந்தியாவைச் சேர்ந்த மனுஷியும் போட்டியிட்டார். போட்டியாளர்கள் கேட்ட அந்த கடைசி கேள்விக்கு மனுஷி அளித்த பதில் தான் அவருக்கு மிஸ் வேல்டு பட்டத்தை உரித்தாக்கியது. ஆம் இந்த ஆண்டில் மட்டுமல்ல எப்போதுமே மனித குலம் இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாத ஒரு பதிலைச் சொன்னார் மனுஷி.
மனுஷியை தேர்ந்தெடுக்கக் காரணமான அந்த கேள்வி?
எந்தத் துறை அதிக ஊதியத்திற்கு தகுதியானது? ஏன்? என்று கேட்டப்பட்ட கேள்விக்கு மனுஷி அளித்த பதில் என்ன தெரியுமா? "தாய்மையைத்தான் உயர்ந்த மரியாதையாக நினைக்கிறேன். இதனை வெறும் பணத்தின் அடிப்படையில் நான் கூறவில்லை. தாய் அன்பை வழங்குகிறார். என் தாய்தான் என்னுடைய பெரிய உத்வேகம். தாய்தான் அதிக மரியாதையைப் பெற வேண்டும்" என்று பதிலளித்தார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மகுடம்
மனுஷியின் பதிலுக்கு கைதட்டல்கள் கிடைத்தது போல அவருக்கான அங்கீகாரமும் கிடைத்தது. 2017ம் ஆண்டின் மிஸ் வேல்டாக மனுஷி சில்லர் அறிவிக்கப்பட்டதும் 2016ம் ஆண்டு உலகி அழகி பட்டம் வென்ற ஸ்டெபானியே டெல் வல்லே மனுஷிக்குக் கிரீடம் அணிவித்தார். ரைட்டா ஃபாரியா, ஜஸ்வர்யா ராய், டயானா ஹைடன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா இவர்கள் வரிசையில் மீண்டும் ஓர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உலக அழகியாக பட்டம் பெறும் இரண்டாவது இந்தியப் பெண் என்பதற்கு உதாரணமானார் மனுஷி.
சமூக அக்கறையுள்ள மனுஷி
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கிறார். இவரது தந்தை டிஆர்டிஓவிலும், தாய் நியூராலஜி மருத்துவராகவும் உள்ளார். மருத்துவரான மனுஷி கிராமப்புறங்களில் பெண் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மிஸ் வேல்டு போட்டியில் பங்கேற்பதற்கு முன்னரே எடுத்து வந்துள்ளார்.
வெளிநாட்டு நிகழ்ச்சிகளில்
மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் பெற்று வந்ததையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா முதல்வர் என அரசியல் தலைவர்கள் முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வரை என பாராட்டுகளை குவித்து வருகின்றனர். 2017ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்த சந்தோஷத்தில் தற்போது மிஸ் வேல்டு மனுஷி சில்லர் அயல்நாடுகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.