கை பிடித்து கதறி அழுது... மாமா... நீ சாப்ட்டியா.. இது ஒரு தாடிக்காரனின் "பக்கா" காதல் கதை!
28 வருட சிறைவாசத்துக்கு பிறகு காதல் ஜோடி இணைந்துள்ளது.
Recommended Video
சென்னை: "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது.. அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் இருந்தால்.. அதுதான் தெய்வத்தின் சந்நிதி" கண்ணதாசனின் இந்த பாடல்தான் சுப்பிரமணியம் - விஜயா மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது
28 ஆண்டுகளுக்கு ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்..
இலங்கை தமிழர் பிரச்சினை தலைதூக்கிய நேரம் அது. அகதிகளாய் ஏராளமானோர் தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் பக்கா. இவருக்கு இன்னொரு பெயர் விஜயா. பிழைக்க வந்த இடத்தில் இவருக்கு கைகொடுத்தது டான்ஸ்தான். தனக்கு தெரிந்த நடனத்தை ஆடி பிழைப்பு நடத்தினார்.
[இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!]
விஜயாவின் அழகு
விஜயாவின் இளமை.. விஜயாவின் நடனம்.. விஜயாவின் அழகு.. விஜயாவின் குணம் ஒரு தாடிக்காரனை சுண்டி இழுத்தது. பெயரே தாண்டிக்காரன்தான். இவருக்கும் இன்னொரு பெயர் உண்டு. அது சுப்பிரமணியம். சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். பெரிய வீட்டு பிள்ளை. நிறைய வசதி. தாடிக்காரனும், பக்காவும் காதலித்தார்கள். வழக்கம்போல் வீட்டில் மறுப்பு.. அதனால் 1985-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கினர்.
வீடு வாசல் இல்லை
பக்கா, தாடிக்காரனுக்கும் டான்ஸ் ஆட கற்றுக் கொடுத்தார். இருவரும் ஒன்றாகவே ஆடினார்கள், ஒன்றாகவே சம்பாதித்தார்கள், ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள்... அன்றைய ஆட்டம் அன்றைய சாப்பாட்டுக்குத்தான் சரியாக இருந்தது. கிடைப்பதை கொண்டு சாப்பிட்டுவிட்டு கிடைக்கும் இடத்தில் அதாவது ரோட்டோரம் படுத்து தூங்கிவிடுவார்கள். வீடு இல்லை... வாசல் இல்லை.. இந்த காதல் ஜோடிக்கு!
சரமாரி தாக்குதல்
ஆனால் வெறும் 5 ஆண்டுகாலம்தான் இந்த வாழ்க்கை. இந்த வருஷத்தில் அவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. இது ஒரு பக்கம் கவலையாகவே இந்த ஜோடிக்கு இருந்தது. ஒருநாள் அப்படித்தான் இருவரும் சாலை ஓரம் தூங்கி கொண்டிருந்தனர். அன்று விழுந்ததுதான் இடி!! சாலையில் தூங்கி கொண்டிருந்த விஜயாவிடம் யாரோ ஒருவர் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இதனை பார்த்துவிட்ட சுப்பிரமணியம், அந்த நபரை அங்கேயே சரமாரியாக தாக்கி விட்டார்.
ஆயுள் தண்டனை
இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். போலீசாருக்கு தகவல் பறந்தது. சாலையில் வந்து கொண்டிருந்தவரை இருவரும் 500 ரூபாய்க்காக வழிப்பறியில் ஈடுபட்டு, கொலையும் செய்துவிட்டதாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் 1990-ம் ஆண்டு கைது செய்தனர். வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்றது... இறுதியில் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பும் வந்தது. ஆளுக்கு ஒரு சிறை!!
ஆளுக்கொரு சிறை
வேலூர் பெண்கள் சிறையில் விஜயாவும், ஆண்கள் ஜெயிலில் சுப்பிரமணியமும் அடைக்கப்பட்டனர். ஒன்றாக சேர்ந்து திரிந்த பறவைகள் தனித்தனியாக கூட்டுக்குள் அடைபட்டு போனார்கள். பக்காவுக்காக வீடு, வாசல், எல்லாவற்றையும்விட்டு விட்டு வந்த சுப்பிரமணியனுக்கு யாருமே ஆஜராகி வாதாட ஆள் இல்லை. சுப்பிரமணியத்துக்கே வாதாட ஆள் இல்லாதபோது, அகதியாக வந்து பெண்ணுக்கு யார் இருப்பார்கள்? இப்படியே வருடங்கள் பறந்தன.
விஜயா விடுதலை
சிறையில் விஜயாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மனநலமும் பாதிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து அவருக்கு பேச்சும் போய்விட்டது. அதனால் 2013-ம் ஆண்டு விஜயா விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆகிவிட்டாலும் மனம் முழுதும் தாடிக்காரனையே தேடியது.
மனம் தேடியது
தனக்காக குடும்பத்தை பகைத்து கொண்டு வந்தவர், தனக்காக வீடு, வாசலை துறந்து சாலையில் ஆடி பாடி பிழைக்க துணிந்தவர், தன் மானத்தை ஒருவனை கொன்று சிறை வரை சென்றவரை மனம் தேடியது. எந்த ஊரிலும் இருக்க பிடிக்கவில்லை விஜயாவுக்கு. தாடிக்காரன் இருப்பது வேலூர்சிறைதானே? அதனால் வேலூர் பக்கத்திலேயே ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி காத்திருக்க தொடங்கினார்.
முதியோர் இல்லம்
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் தாடிக்காரன் என்கிற சுப்பிரமணியம் விடுதலை ஆனார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதில்தான் சுப்பிரமணி விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரது கண்கள் தேடியது தன் பக்காவைதான்... அங்கு பக்கா இல்லை... கடைசியில் முதியோர் இல்லத்தில் அவர் இருப்பது தெரியவந்ததையடுத்து உடனடியாக பறந்து வந்தார்.
மாமா.. சாப்டியா?
ஒன்றல்ல.. இரண்டல்ல... 28 ஆண்டுகள்! தேக்கி வைத்த ஆசைகளுடன் 60 வயது விஜயா சுப்பிரமணியனை பார்த்து ஓடி சென்றார். அவரது கையை கெட்டியாக பிடித்து கொண்டு கதறி அழுதார். விஜயாவின் முதல் வார்த்தை "மாமா......" என்றார். அதற்கு சுப்பிரமணியம், "நீ சாப்டியா.. நீ சாப்டியா.." என்று கனிந்த காதலுடன் கேட்டார். இதை அங்கிருந்த எல்லோருமே பார்த்து கண்கலங்கி நின்றார்கள்.
இனி அவள்தான் எனக்கு
இப்படி 28 வருஷங்கள் கழித்து ஒன்றாக சேர்ந்தது குறித்து சுப்பிரமணியம் சொல்லும்போது, "இனி அவளுக்கு நான் தான்.. எனக்கு அவள் தான்.. என் உயிர் உள்ளவரை விஜயாவை விட்டு பிரிய மாட்டேன். எங்கள் சொந்த ஊருக்கே நாங்கள் போக போகிறோம்" என்றனர்.
காதலின் இன்னொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது!!