6 நாட்களுக்கு பின் தமிழ்நாடு டூ கர்நாடகா பஸ் போக்குவரத்து சீரடைந்தது
சென்னை: காவிரி தண்ணீரை திறந்த விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து. கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. அங்கு தற்போது பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கர்நாடகம், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் போராட்டங்களில் குதித்தனர். இதையடுத்து கர்நாடக அரசு 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பஸ்கள் லாரிகள் எதுவும் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய முடியவில்லை. மேலும் ஓசூர் உள்ளிட்ட கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே லாரி மற்றும் பஸ்கள் 5 நாட்களாக நிறுத்தப்பட்டன.
மேலும் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களும் கர்நாடகத்தில் தாக்குதலுக்குள்ளாகின. தமிழக லாரிகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. கர்நாடக பந்த்தின்போது தமிழக பதிவெண் கொண்ட பல வாகனங்கள் தாக்குதலுக்குள்ளாகின.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளும் கர்நாடகத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளன.