6 மாதங்களுக்குப் பின் விடிவு காலத்தைக் கண்ட அரசு திட்டங்கள்!
ஜெயலலிதா செப்டம்பர் மாதம் மருத்துவமனைக்கு சென்றது முதல் கிடப்பில் போடப்பட்ட பணிகள் இப்போது எடப்பாடி பழனிச்சாமியினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு சென்ற நாள் முதல் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டப்பணிகளை இன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு எட்டு கிராம் தங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலம் சீரடையாமலேயே டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணமடைந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். தைப் பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும், மிதிவண்டி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
60 நாட்களில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இன்று கலைவாணர் அரங்கில் காணொலி காட்சி மூலம் பல மாவட்டங்களில் கட்டப்பட்டிருந்த அரசு கட்டடங்களை தொடக்கி வைத்தார். ரூ.1,486 கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்த முதல்வர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அதிநவீன கருவிகளை வழங்கினார். ரூ.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும் முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.
மேலும் 7 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். இதே போல் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் 26 துறையில் உள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மொத்தம் 208 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்ற நாள் முதல் 6 மாதங்களாக மிகப்பெரிய அரசு விழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.