சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமை- மாணவி தற்கொலை!
சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமான மற்றொரு சீனியர் மாணவி கோடீஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் படித்து வந்தார். 2ஆம் ஆண்டு மாணவியான யோகலட்சுமியை 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவி கோடீஸ்வரி ராகிங் என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளார்.
இந்த சித்ரவதையை பொறுக்க முடியாமல் நேற்று யோகலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தமது மரணத்துக்கு சீனியர் மாணவி கோடீஸ்வரியே காரணம் என்றும் அவர் தமக்கு பாலியல் ரீதியாக ராகிங் தொல்லை கொடுத்ததாகவும் டைரியில் வாக்குமூலமாகவும் யோகலட்சுமி எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து யோகலட்சுமியின் தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கோட்டீஸ்வரியை போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.