ராகிங் கொடுமை: மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன். இவரது மனைவி சாவித்திரி ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் 3வது மகன் முகில்ராஜ்குமார் (18). இவர் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாண்டு படித்தார்.
முதலாண்டு மாணவர்களுக்கான கல்லூரி விடுதியில் இடமில்லை என்பதை காரணம் காட்டி, 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேருடன் முகில்ராஜ்குமார் தங்க வைக்கப்பட்டார்.விடுதியில் சேர்ந்த 2வது நாளில் இருந்தே முகில் ராஜ்குமார் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் மகன் தங்கியிருக்க வாடகைக்கு வீடு பார்த்துள்ளனர். புதிதாக கட்டிய அந்த வீட்டின் உரிமையாளர் நாளை கிரகப்பிரவேசம் நடத்துகிறார். அவரது அழைப்பை ஏற்று ராஜ்குமாரின் பெற்றோர் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இதற்கிடையில், ராகிங் கொடுமையை தாங்க முடியாமல் வியாழக்கிழமை இரவு முகில்ராஜ்குமார் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவரை சக மாணவர்கள், கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
தகவலறிந்ததும், காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி, இன்ஸ்பெக்டர்கள் பிரபாகர், கோகுல்ராஜ், எஸ்ஐ நடராஜன் ஆகியோர் கல்லூரியில் விசாரணை நடத்தினர். முகில்ராஜ்குமார் பெற்றோருக்கும் தகவல் தரப்பட்டது.நேற்று காலை 6 மணிக்கு கல்லூரிக்கு வந்த அவர்கள், மகன் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறத்தினர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் இந்திராநாராயணன். மேலிட பொறுப் பாளர் பாசறை செல்வராஜ், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய நிர்வாகிகள் புத்தேரி ஸ்டான்லி, ஓரிக்கை வல்லரசு ஆகியோரும் கல்லூரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
மதியம் 12 மணி வரை போராட்டம் நீடித்தது. பின்னர் கல்லூரி நுழை வாயில் மூடப்பட்டது. பின்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெற்றோர் தரப்பில் ‘கல்லூரிக்கு நாங்கள் கட்டிய 45 லட்சத்தை தரவேண்டும். மகன் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி கல்லூரி நிர்வாகத்தினர் ரூ.45 லட்சத்தை முகில்ராஜ்குமாரின் பெற்றோரிடம் வழங்கினர். இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, மாணவன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.