தமிழகம் முழுவதும் ‘நமோ’ டீ ஸ்டால்கள்: மோடி புகழ் பரப்ப திட்டம்
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் புகழை அடித்தட்டு மக்களுக்கும் பரப்பும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நமோ டீ ஸ்டால்களை திறக்க நமோ பேரவை முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது முதலே பாஜக தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
நரேந்திர மோடியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மேலும் வலுசேர்க்க பாதயாத்திரை, வீடுதோறும் மோடி என்று பல்வேறு பிரசார யூகங்களை வகுத்து வருகின்றனர்.
4 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்ததும் தொண்டர்களின் உற்சாகம் ஒரு படி அதிகரித்தது.
நமோ பேரவை
அடித்தட்டு மக்களிடமும் நரேந்திர மோடியின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் விதமாக கோவையில் பாஜக தொண்டர்கள் ‘நமோ பேரவை' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
நமோ டீ ஸ்டால்
நரேந்திர மோடி பெயரின் சுருக்கத்தையே "நமோ" என்று வைத்துள்ளனர். இந்த பேரவையில் உள்ளவர்கள் நமோ டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடையை நடத்துகிறார்கள்.
வடமாநிலங்களில் நமோ
இந்த நமோ டீ ஸ்டால்கள் ஏற்கனவே பீகார் மற்றும் வட மாநிலங்களில் இயங்கி வருகின்றன. அங்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டோம். அதன்படி நமோ டீ ஸ்டாலை உள்ளூர் விற்பனையாளர் மூலம் அமைத்து வருகிறோம். இதற்கான பேனர்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்களை நாங்களே வினியோகிப்போம். இந்த திட்டம் மிகவும் எளிமையானது என்கிறார் நமோ பேரவையின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் ஸ்ரீனிவாசன்.
கோவையில் 7 டீஸ்டால்
தமிழகத்தில் நமோ பேரவையின் முதல் நமோ டீ ஸ்டால் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜனவரி மாத இறுதிக்குள் 7 நமோ டீ ஸ்டால்களை கோவை நகருக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக இந்த டீ ஸ்டால்கள் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் அமைக்கப்படும்.
மோடியின் சாதனைகள்
நரேந்திரமோடி ஆட்சிகாலத்தில் தொழில் வளர்ச்சியில் குஜராத் முதல் மாநிலமாக மாறியது முதல் அங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் என பல்வேறு நலத்திட்டங்களை அந்த நோட்டீசுகளில் குறிப்பிட்டு உள்ளோம். இதன் மூலம் விற்பனையாளரால் மோடியின் சாதனைகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் அவருக்கு அதிக டீயும் விற்பனையாகும் என்றார் பிரவீண் ஸ்ரீனிவாசன்.
அமோக வரவேற்பு
இந்த டீ ஸ்டாலில் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. என்று கல்லூரி பேராசிரியரும், நமோ பேரவையின் உறுப்பினருமான தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். நாங்கள் கடந்த டிசம்பர் 10-ம் தேதி முதல் நமோ டீ ஸ்டாலை சித்தோட்டில் தொடங்கினோம்
இங்கு வரும் பொதுமக்களிடம் டீ குடிக்கும் நேரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி அரசு செய்த சாதனைகள் குறித்து பிரசாரம் செய்கிறோம் என்றார்.
தமிழகம் முழுவதும் நமோ
நமோ பேரவையின் தொண்டர்கள் இந்த மாதத்தின் 2வது வாரத்தில் அதிக இடங்களில் நமோ டீ ஸ்டால்களை அமைக்க உள்ளனர். டீ ஸ்டால்களை நடத்தி வரும் உரிமையாளர்களையும் எங்களது திட்டத்தில் இணைக்க உள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது கடையை நமோ டீ ஸ்டால் பேரவையின் சங்கிலித்தொடரில் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக 2000-க்கும் மேற்பட்ட நமோ பேரவை தொண்டர்கள் பல்வேறு இடங்களில் உள்ள டீ ஸ்டால் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஃபேஸ்புக் மூலம்
எங்களது வெளிப்புற பிரசார யுக்திகளின் காணொலியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதன் மூலம் பொதுமக்களை எளிதில் கவர்ந்து வருகிறோம்.
எங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டீ மற்றும் திண்பண்டங்களை கேட்டு காத்திருக்கும் போது நமோ டீ ஸ்டால்களின் பெயர்களை படிக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்கும்போது தேர்தல் பிரசார விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதன்மூலம் எங்களது பிரசாரம் எளிய முறையில் வாக்காளர்களை சென்றடைகிறது.
மாநில பேரவைக் கூட்டம்
எங்கள் பேரவையின் முதல் மாநில பேரவை தொண்டர்கள் கூட்டம் கோவையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதில் நமோ டீ ஸ்டால்களின் மூலம் செய்யப்படும் பிரசார திட்டங்களை குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்றும் தாமரைக்கண்ணன் கூறியுள்ளார்.
அம்மா கேண்டீன் போல
தமிழகத்தில் ஏற்கனவே மலிவு விலை உணவகமான அம்மா கேண்டீன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு காலை, மதியம் மலிவான விலைவில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் நமோ டீஸ்டால்களில் மலிவு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார் நமோ பேரவைத் தலைவர்.