திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திட்டம்: ஸ்டாலின் திடுக் தகவல்
திருவாரூர்: திமுக உறுப்பினர்கள் சிலரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு பலே திட்டம் வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் இன்று மாலை பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறியதாவது:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை சட்டசபைக்கு ஆதாரத்தோடு எடுத்துக் காட்டவே குட்கா பாக்கெட்டுகளை சட்டசபைக்கு கொண்டு சென்று காண்பித்தேன்.
உரிமைமீறல்
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, நான் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
தப்பு இல்லை
இதன்பிறகும்கூட தமிழகத்தின் பல பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. நான் சட்டசபையில் ஆதாரத்தோடு காட்டியதால்தான் அரசு நடவடிக்கையை எடுத்தது. எனவே நான் செயல்பட்ட விதத்தில் தவறு கிடையாது. ஆனால் எடப்பாடி அரசு
கொல்லைப்புறமாக ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்காக உரிமைமீறல் விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டம்
குட்கா விவகாரத்தில் உரிமை குழுவை இப்போது கூட்ட வேண்டிய அவசியம் என்ன? (28ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது). உரிமைமீறல் குழு நடவடிக்கையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். திமுக உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அது நடக்காது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆட்சி காப்பாற்ற
திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய, உரிமைக் குழு பரிந்துரை செய்தால், தினகரன் அணியினர், திமுகவினருடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க மேற்கொண்டாலும், அது முடியாமல் போகும் என எடப்பாடி தரப்பு கருதுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஸ்டாலினும் அவ்வாறே கூறியுள்ளார்.