நெல்லை வேளாண் அதிகாரி மரணம்: 'திடீரென' தமிழக கட்சிகள் போராட்டத்தில் குதிக்க காரணம் தெரியுமா?
சென்னை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தி்ல் மவுனம் காத்த தமிழக அரசியல் கட்சிகள் தற்போது தூக்கத்தில் இருந்து முழித்தவர்களை போல, திடீரென போராட்டங்களில் ஈடுபடுவதன் பினனணியில் கர்நாடக அரசியல் கட்சிகளின் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருமால் நகரை சேர்ந்த வேளாண்மை இனஜினீயர் முத்துக்குமாரசாமி (57). கடந்த மாதம் (பிப்ரவரி) 20ந்தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் காலியாக இருந்த 5 பணியிடங்களை நிரப்புவதில் சென்னையில் இருந்து முத்துக்குமாரசாமிக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு அவர் உடன்படவில்லை என்றும் இதனால் நெருக்கடிகள் மேலும் அதிகரித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே முத்துக்குமாரசாமி மனமுடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
சிஐடி விசாரணை
இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணம் சொல்லப்படாமல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சுமார் ஒரு மாதம் கழித்து, திடீரென இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று, தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அரசியல் கட்சிகள்
திமுக சார்பில் இதுதொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், கருணாநிதி நேரில் வந்து பங்கேற்றார். திமுகவின் கனிமொழி, முத்துகுமாரசாமி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டு வந்தார். இதைவிட ஆச்சரியமாக, ஆம் ஆத்மி கட்சியினர் முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆம் ஆத்மி தந்த சர்ப்ரைஸ்
இப்படி ஒரு போராட்டம் நடக்கப்போவதாக மாநில காவல்துறைக்கோ, உளவுத்துறைக்கோ தெரியாது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட போலீஸ் சுதாரிக்கும் நேரத்திற்குள் அந்த போராட்டம் நடந்து முடிந்துவிட்டது.மற்றொருபுறம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோரும், முத்துகுமாரசாமி விவகாரத்தில், அடுத்தடுத்து அறிக்கைகளை விடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தபடி உள்ளனர்.
கர்நாடக எதிரொலி
ஏன் இந்த அக்கறை, திடீரென யாருக்குமில்லாத அக்கறை என்று பலருக்கும் வியப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால், இந்த விவகாரத்தில், கர்நாடகாவின் போராட்டத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில், பெங்களூரில் ஐஏஎஸ் அதிகாரி டிகே ரவி கடந்த வாரம் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக எதிர்க்கட்சிகள் இரவு பகலாக சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா நடத்தினர். எதிர்க்கட்சியான பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை கிளப்பினர்.
தொடர் போராட்டம்
நாடாளுமன்றத்தில் பதில் அளித்த உள்து்றை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடக அரசு சிபாரிசு செய்தால், இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க தயார் என்று அறிவித்தார். ஆனால் கர்நாடக அரசு சிஐடி போலீசாரே விசாரிப்பார்கள் என்று தனது பிடியில் இறுக்கமாக இருந்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகளும், பல்வேறு ஜாதி சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரு சம்பவங்களுக்கும் ஒற்றுமை
இதனிடையேதான், முத்துகுமாரசாமி பிரச்சினையில் தமிழக கட்சிகள் தோள் தட்ட ஆரம்பித்துள்ளன. ஏனெனில் டிகே ரவி மற்றும் முத்துகுமாரசாமி ஆகியோரின் மரணத்தில் பல ஒற்றுமைகள் உள்ளன. நேர்மையான இவ்விரு அதிகாரிகளுமே நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நியாயம் கிடைத்தால் சரி
டிகே ரவி விவகாரத்தில் அந்த அளவுக்கு கர்நாடகம் கொந்தளிக்கும்போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் நாடு என்ன நினைக்கும் என்ற எண்ணம் ரொ...ம்ப மெதுவாக நமது மாநிலத்தில் எதிரொலித்ததன் விளைவுதான் இந்த போராட்டங்கள். கர்நாடக அரசு ரவி விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்தால், தமிழகத்திலும், கோரிக்கை மேலும் வலுக்கும் என்று எதிர்பார்க்கலாம். எப்படியோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தால் சரிதான்..