யார் தமிழக காங். தலைவர்? ஒரு மாத குழப்பத்துக்கு 'எண்ட் கார்ட்' எப்போது?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அல்லது சுதர்சன நாச்சியப்பன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் புதிய தலைவர் யார் என அறிவிக்கப்படாமல் குழப்பம் நீடித்து வருகிறது.
ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், வசந்தகுமார், செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ், குஷ்பு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் தலைவர் பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் சோனியா, ராகுல் ஆகியோரையும் சந்தித்து பேசி வருகின்றனர்.
திருநாவுக்கரசருக்கு செக்
இதனிடையே தலைவர் பதவிக்கான போட்டியில் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ப.சிதம்பரத்தையும், திருநாவுக்கரசரையும் நியமிக்க இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநாவுக்கரசருக்கு எதிராக 39 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காமராஜருக்கு துரோகம்
அதில், திராவிட இயக்க சிந்தனையோடு பயணித்து வரும், மதவாத இயக்கத்தில் பயணித்தவரும், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த தலைமைக்கும், இயக்கத்துக்கும் விசுவாசத்தோடு பணியாற்றாதவருமான திருநாவுக்கரசருக்கு தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது காமராஜருக்கு இழைக்கும் துரோகம். இயக்கத்தின் வலிமையை குறைத்து விடும் வகையில் புதிய தலைவர் நியமனம் அமைந்துவிட கூடாது. இயக்கத்துக்கு நம்பிக்கையும், விசுவாசமும் கொண்ட தேசிய உணர்வாளர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ப.சி அல்லது சுதர்சன நாச்சியப்பன்?
இந்த நிலையில் ப.சிதம்பரம் அல்லது சுதர்சன நாச்சியப்பனுக்குத்தான் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் ஒருவரை தலைவர் பதவியில் நியமிக்க கட்சி மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறதாம்.
இன்று அல்லது நாளை?
அதே நேரத்தில் ஒரு மாத காலமாக ஒரு தலைவரை நியமிக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தத்தளித்து வருவது அக்கட்சியினரையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேறு வழியே இல்லாமல் புதிய தலைவர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.