அதிமுகவை குடும்ப சொத்தாக்க முயன்று முடியாமலேயே மரணித்த 'நடராஜன்'
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடராஜனின் அரசியல் வியூகம் அவரது கடைசி காலம் வரை எடுபடாமல் போய்விட்டது பரிதாபத்துக்குரியதே.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்குபின்னர் நடராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்ட நில்லையில் அதிமுகவை குடும்பச் சொத்தாக்கும் அவரது அரசியல் வியூகம் எடுபடாமல் போய்விட்டது.
யாரும் எதிர்பாராத சூழலில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா மரணமடைந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆரம்ப காலத்தில் நடராஜன் முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஆனால் நாளடைவில் அவர் ஓரம் கட்டப்பட்டார்.
ஜெ. மறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்முறையாக நடராஜன் பேட்டி அளித்தார். அப்போது, எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுகவை காப்பாற்ற ஜெயலலிதாவை முன்னிறுத்தியது எங்கள் குடும்பத்தினர்தான். ஜெயலலிதா தலைமையில் அதிமுக கொண்டுவர நாங்கள் படாதபாடுபட்டோம்.
ஜெ.வுக்கு கற்றுக் கொடுத்தேன்
ஜெயலலிதாவை பெரிய தலைவராக்க அவர் தோற்றத்தை மாற்ற வேண்டிய பணிகளில் சசிகலா ஈடுபட்டார். பின்னர் பத்திரிகையாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை நான்தான் ஜெயலலிதாவுக்கு கற்றுக் கொடுத்தேன்.
உடலுக்கு பக்கத்தில் நிற்க வைத்தேன்
அதிமுகவில் முக்கிய பதவியில் இருந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் மறைந்ததை கூட யாரும் தெரிவிக்கவில்லை. நான் செய்தி துறையில் இருந்ததால் எனக்கு தகவல் கிடைத்தவுடன் மனைவி சசிகலாவை கூட்டிக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்து ஜெயலலிதாவுடன் ராஜாஜி அரங்கத்துக்கு சென்றோம். அங்கு ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் எப்படியோ அவரை எம்ஜிஆரின் உடலுக்கு பக்கத்தில் நிற்கவைத்தேன்.
ஜெ.மறைந்த ஈரம்
எம்ஜிஆரின் உடல் பக்கத்தில் காலையிலிருந்து மறுநாள் காலை வரை பக்கத்திலேயே நின்றிருந்து சாதனை புரிந்தது ஜெயலலிதா என்றால், அந்த சாதனைக்கு பக்கபலமாக இருந்தது நானும், சசிகலாவும், தினகரனும், திவாகரனும்தான். எனவே ஜெயலலிதாவையும் அதிமுகவையும் பாதுகாத்த எங்கள் குடும்பத்தினர்தான் அதிமுகவை காப்போம். எங்கள் குடும்ப ஆட்சிதான் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். ஜெயலலிதா மறைந்த ஈரம் கூட காயாத நிலையில் ஆட்சியையும், கட்சியையும் கபளீகரம் செய்ய முற்படும் நடராஜனின் பேச்சு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
சசிகலாவை நீக்கும் அளவுக்கு
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவின் நடை, உடை, அலங்காரத்தை ஜெயலலிதாவை போல் மாற்றியதற்கும் நடராஜன் பெரும் பங்கு வகித்தார் என்று கூறுப்படுகிறது. மேலும் சசிகலாவை முதல்வராக்குவதற்காக ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்ததும் நடராஜன்தான் என்றும் கூறுகின்றனர். இதனிடையே நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத போன காரணத்தால் அதிமுகவை நிர்வகிக்கும் சக்தி தினகரனுக்கு உண்டு என்பதால் அவரிடம் பொறுப்பை கொடுத்தார் நடராஜன். ஆனால் தினகரனோ நடராஜன் உள்ளிட்டோரை ஓரங்கட்டுவதற்காக எடப்பாடி பழனிச்சாமியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு காய் நகர்த்தி வந்தார். அதன்பின்னர் தினகரனும் சிறை சென்றுவிட்டார். அதிமுகவில் அனைத்தும் மாறிவிட்டது.
குடும்பத்தினர் செய்திருப்பர்
இவையெல்லாம் நடராஜனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் செயல்பட முடியாத காரணத்தினால்தான் நடந்தது. தற்போது நடராஜன் காலமாகிவிட்டார். ஒரு வேளை நடராஜன் நலமுடன் இருந்திருந்தால் அதிமுகவை குடும்ப சொத்தாக்கும் வியூகங்கள் தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.