ஜெயலலிதா போன பிறகு.. சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி! #Jayalalitha # Jaya
ஜெயலலிதாகு மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததோடு மாநிலம் இதுவரை சந்திக்காத பல்வேறு சோதனைகளை சந்தித்தது.
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுகவில் பிளவு, கூவத்தூர் கூத்துகள் உள்ளிட்ட சோதனைகளையும் தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையையும் தமிழகம் சந்தித்தது.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஜெயலலிதா கண் அசைவுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் ஜெயலலிதாவின் கருவிழியின் ஓட்டம் நின்றுவிட்ட பிறகு இவர்களின் ஆட்டமும் அதிகரித்துவிட்டது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அக்கா மட்டும் போதும் என்று கூறியே அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா தன்வசப்படுத்திக் கொண்டார். அதன்பின்னர் ஆட்சியிலும் ஜெயலலிதாவை போல் வலம் வர வேண்டும் என்பதற்கான வேலைகளில் இறங்கினார்.
சசிகலா நிர்பந்தம்
முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு அவமானங்களை ஏற்படுத்தி அவராகவே ராஜினாமா செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ்ஸும் ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்ட ஓபிஎஸ் பொங்கி எழுந்தார். இதன் விளைவாக அதிமுக இரு அணிகளாக பிரிந்தது.
சந்தி சிரித்த கூவத்தூர் கூத்துகள்
சசிகலாவுக்கு ஆதரவளித்த 122 எம்எல்ஏக்கள் அணி மாறிவிட கூடும் என்பதால் அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தனர். 122 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொண்டு சென்று பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் கொடுத்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கடிதத்தை வாங்கிக் கொண்ட ஆளுநர் முடிவேதும் எடுக்காமல் மும்பைக்கு பறந்தார்.
சசிகலாவுக்கு தண்டனை உறுதி
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் பிப்ரவரி 14-ஆம் தேதி சிறைக்கு சென்றார். அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டபேரவை தலைவராக தேர்வு செய்துவிட்டு சென்றார். மேலும் தினகரனை அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமித்தார். இதன் பிறகு, எடப்பாடியும் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஆளுநர் உத்தரவிட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.
தினகரன் ஒதுக்கி வைப்பு
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரு அணிகளும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரன் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தினகரனின் தலையீடு ஆட்சியில் அதிகமாக இருந்ததாலும் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டதாலும் அவரை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலாவையும் ஒதுக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சசிகலா ஒதுக்கப்பட்டு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டதால் இரு அணிகளும் ஒன்றாக இணைந்துவிட்டன. ஆனால் தினகரன் தனக்கென்று 18 எம்எல்ஏக்களை சேர்த்து கொண்டு அவரும் ஒரு கூத்தடித்தார். 18 பேரும் அணி தாவிவிடக் கூடாது என்பதற்காக புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க்கில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைத்தார். இந்த 18 பேரும் மக்கள் பிரச்சினைகள் குறித்து எள்ளளவும் யோசிக்காமல் சீசா விளையாடுவது , ஊஞ்சல் விளையாடுவது என பொழுதை கழித்தனர். இறுதியில் 18 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
வறுபடும் அமைச்சர்கள்
தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளால் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வறுபடுகின்றனர். என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் எதையாவது உளறி கொட்டுவது என அமைச்சர்கள் செயல்படுகின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் இந்த ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து போராடி வருகின்றனர். ஜெயலலிதா மறைந்த இந்த ஓராண்டு காலத்தில் இதுவரை எந்த ஆட்சியிலும் இது போன்ற களேபரங்களை மக்கள் பார்த்ததில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்திருப்பர் என்று பொதுமக்கள் பேசிவருகின்றனர்.