தினகரனுக்கு போட்டியாக கிருஷ்ணபிரியா?- சசிகலாவின் புது கணக்கு
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை கிருஷ்ணப்பிரியா மூலமாக விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய சசகிலா முடிவு செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வரும் விசாரணை கமிஷனிடம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை கிருஷ்ணப்பிரியா மூலமாக தாக்கல் செய்ய சசிகலா முடிவு செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அரசு சார்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த கமிஷனின் விசாரணை ஆர்.கே.நகர் தேர்தலை தொடர்ந்து சூடுபிடிக்க ஆரம்பித்தது.
டிடிவி தினகரன், சிறையில் உள்ள சசிகலா, கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக கூறி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது.
கிருஷ்ணபிரியா வாயிலாக ஆவணங்கள்
இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா நேரில் ஆஜராகாமல் தன்னிடம் உள்ள ஆவணங்களை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா மூலமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளார்.
அங்கீகாரம்
இதுதொடர்பாக ஆணையத்திற்கு அவர் இமெயில் மூலம் தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணப்பிரியாவிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி ஆறுமுகசாமி கமிஷன் முன் ஆஜராகும் போது அவர் இந்த ஆவணங்களை வழங்குவார் என்றும் கருதப்படுகிறது. இதற்கான அங்கீகார கடிதத்தை விரைவில் சசிகலா கிருஷ்ணப்பிரியாவுக்கு வழங்குவார் என்றும் கருதப்படுகிறது.
பெண் தொண்டர்கள்
"உங்களால் நான்... உங்களுக்காகவே நான்" என்ற மந்திர சொல் மூலமாக தனிப்பெண்மணியாக அதிமுக தொண்டர்களை தன் வசம் வைத்திருந்த ஜெயலலிதாவின் கட்சியில் தற்போதும் பெண் தொண்டர்களே பிரதானம்.
கிருஷ்ணபிரியாவுக்கு முன்னுரிமை
இத்தகைய கட்சியில் ஜெயலலிதாவிற்கு பின் சசிகலாவின் வரவை ஆண் தொண்டர்களை விட பெண் தொண்டர்களே பெரிதும் எதிர்த்தனர். ஜெயலலிதாவிடமிருந்த ஈர்ப்பு, மிடுக்கு, கம்பீரம் சசிகலாவிடம் இல்லாததே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இந்நிலையில் இதனை காலம் தாழ்த்தி உணர்ந்துள்ள சசிகலா, தற்போது கட்சியில் இளம் பெண் தலைவராக கிருஷ்ணப்பிரியாவை முன்னிறுத்த முடிவு செய்துள்ளார்.
வீடியோ பஞ்சாயத்து
இதன் காரணமாகவே சமீபகாலமாக கட்சியின் பல விஷயங்களில் கிருஷ்ணப்பிரியாவின் தலையீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டதில் தினகரன் மீது சசிகலா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தினகரனையே எதிர்க்கும் ஒரு சக்தியாக விரைவில் கிருஷ்ணப்பிரியா உருவாவார் என்றும் கருதப்படுகிறது.