அடிதடி.. வேஷ்டி கிழிப்பு, சேர் உடைப்பு... இதெல்ல்லாம் சகஜமாகிப் போன சத்தியமூர்த்தி பவன்
கோஷ்டிகளுக்குப் பெயர் போன தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகம் அமைந்துள்ள சத்யமூர்த்தி பவன் கண்டிராத தாக்குதல்களே இல்லை.
சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவன் நீண்ட காலமாக அமைதிப்பூங்காவாக இருந்த நிலையில் இன்று மீண்டும் மகிளா காங்கிரஸ் கோஷ்டியின் குடுமிப்பிடி சண்டையால் ரணகளமாகிவிட்டது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கு மட்டும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. எல்லாம் சிவமயம் என்றால் எனக்கு எல்லாம் பயமயம் என்று கமல் சொல்வது போல, கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிப்பதற்கு பதில் இவர்கள் கோஷ்டிக்காக போடும் சண்டைகள் இருக்கே அப்பப்பா சொல்லி மாளாதவை.
ப.சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, இப்போது திருநாவுக்கரசர் கோஷ்டி, குஷ்பு கோஷ்டி, நக்மா கோஷ்டி என காங்கிரசின் கோஷ்டிகளைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். நல்ல வேளையாக ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிவிட்டதால், அவரது ஆதரவாளர்கள் முஷ்டியை முறுக்கும் காட்சிகள் இல்லை.
'கை' தேர்ந்தவர்கள்
2007ம் ஆண்டு கிருஷ்ணசாமி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த போதே அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை யார் தலைமையில் கொண்டாடுவது என்று வெடித்த கோஷ்டி சண்டையில் சத்யமூர்த்தி பவனையே அடித்து காலி செய்தனர் 'கை'க்ட்சிக்காரர்கள். இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்சி அலுவலகத்திலேயே பூட்டி வைத்தார் மறைந்த சுதர்சனம்.
தப்பிச்சோம்
இதற்கு அடுத்ததாக வாசன் கோஷ்டியினருக்கும் அவ்வபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கும் இடையே ஒரு மோதல் இருந்த வண்ணமே இருந்தது. ஞானதேசிகன், மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலகட்டத்தில் மட்டுமே வாசன் கோஷ்டியினர் சற்று அடக்கி வாசித்தனர்.
கட்சி ஆபீஸ் கபளீகரம்
இதே போன்று 2011 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற போது அதற்கு பொறுப்பேற்று தங்கபாலு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனை கபளீகரம் செய்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த சண்டையால் சத்யமூர்த்தி பவனில் இருந்த நாற்காலிகள், மேஜைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
கொடும்பாவி எரிப்பு
கடைசியாக 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் தோல்வியடைந்ததற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார். இதனால் இரண்டு பிரிவுக்கும் இடையே கடுமையான மோதல் உருவாக கொடும்பாவி எரிப்பு, வார்த்தைப் போர் என்று எதிர்முழக்கம் என்று அதகளப்பட்டு விட்டது.
பஞ்சமில்லா விமர்சனங்கள்
கருத்து சுதந்திரம் மிக்க காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது என்பது சர்வசாதாரணம். கடந்த 2015ல் விஜயதாரணி எம்எல்ஏவை இளங்கோவன் பொதுஇடத்தில் வைத்து திட்டியதற்காக போலீஸ் ஸ்டேஷன் வரைசென்று புகார் அளித்த கதையும் இருக்கிறது.
அதான பார்த்தோம்
இப்போதும் திருநாவுக்கரசரின் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை விமர்சித்து இளங்கோவன் பதிலடி கொடுத்து வருகிறார். ஆனால் இவையெல்லாம் வெறும் வார்த்தைச் சண்டைகள் தான். 2 வருஷத்துக்கு மேல அமைதியா இருந்த சத்யமூர்த்தி பவனில் இன்று மகிளா காங்கிரஸை சேர்ந்த இரண்டு பேர் குழாயடி சண்டை போட்டு, அந்தக் குறையை போக்கியுள்ளனர். அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் ஜகஜம் பாசு.