பிறந்ததில் இருந்து ஓராண்டாக ஐசியுவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்
சென்னை: பிறந்ததில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தை வீராவுக்கு உதவி செய்யுமாறு அவரது தந்தை அன்பு உள்ளங்களிடம் மன்றாடுகிறார்.
சென்னையில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை செய்பவர் யோகேஷ் கன்னா. அவரது மாத வருமானம் ரூ. 28,000. அவர் தனது மனைவி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு யோகேஷின் மனைவி கர்ப்பமானார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார்.
24.3 வாரத்தில் முன்கூட்டியே குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு வீரா என்று பெயர் வைத்துள்ளார்கள். பிறந்ததில் இருந்து வாழ்க்கையுடன் போராடுவதால் வீரா என்று பெயர் வைத்துள்ளனர்.
வீராவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் யோகேஷ். ஆனால் குழந்தையை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள அதிக செலவாகும். குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் குறைந்தது 6 மாதமாவது ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் பயன்படுத்த வேண்டும். அந்த மெஷினின் விலை ரூ. 2 லட்சமாகும்.
அதை வாங்க வசதி இல்லாததால் அதை மாதம் ரூ.18 ஆயிரம் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். 4 மணிநேரத்திற்கு ஒரு முறை வீராவுக்கு சக்ஷன் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நர்ஸ் தேவை. நர்ஸின் மாத சம்பளம் ரூ. 50 ஆயிரம். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க வேண்டும். மருத்துவமனைக்கு அருகிலேயே குடியேறுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் வீட்டு வாடகை மாதம் ரூ.30 ஆயிரம் வருகிறது.
யோகேஷ் வீராவுக்காக இதுவரை ரூ. 53 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த குழந்தையும் இறந்துவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும் என்று இருக்கிறார் யோகேஷ்.
தன் குழந்தையை காப்பாற்ற தயாள குணம் உள்ள மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிறார் யோகேஷ். வீராவுக்கு உதவ விரும்பும் நல் உள்ளங்கள் கெட்டோ அமைப்பு மூலம் உதவி செய்யலாம்.