முரசொலி அலுவலகம் வந்த திமுக தலைவர் கருணாநிதி.. பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்!
ஓராண்டுக்குப் பின் முரசொலி அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்றுள்ளார்.
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பின் முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பவள விழா காணும் முரசொலி பத்திரிக்கையின் புகைப்படக் கண்காட்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி அக்டோபர் 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் பார்க்காமல் இருந்தார்.
காத்திருந்த கண்காட்சி
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த ஒராண்டாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் புகைப்படக் கண்காட்சி முடிந்த பிறகும் கருணாநிதிக்காக தொடர்ந்து கலைக்கப்படாமல் இருந்தது.
கண்காட்சியை பார்வையிட்டார்
இந்நிலையில் கருணாநிதி ஓராண்டுக்குப் பின் முதல்முறையாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். அங்குள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார்.
முரசொலிதான் மூத்தப்பிள்ளை
முரசொலி பத்திரிக்கையை தனது மூத்தப்பிள்ளை என கூறுவார் கருணாநிதி. கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகத்திற்கு சென்றார்.
கருணாநிதி குறித்து வதந்திகள்
கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. ஆனால் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.
கொள்ளுபேரனுடன் கொஞ்சல்
இந்நிலையில் கருணாநிதி முரசொலி பவள விழாவை புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுவது அவரது கட்சியினரையும் தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் கருணாநிதி தனது கொள்ளுபேரனுடன் கொஞ்சி மகிழும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.