ராஜபக்சேவுக்கு அழைப்பு... 'பேரிடிதாங்கியாக' பாஜக கூட்டணியில் நீடிப்பாரா வைகோ?
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து பாஜக அரசு தொடக்கத்திலேயே கூட்டணிக் கட்சியின் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் மோடி வந்தால் தீர்வு வரும் என்று நம்பிக்கை கொடுத்த வைகோ தொடர்ந்து பாஜக கூட்டணியில் நீடிப்பாரா? என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசார கூட்டங்களி, நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் நிச்சயம் ஈழத் தமிழர் துயரத்துக்கு விடியல் கிடைக்கும் என்று நம்பிக்கை பிரசாரத்தை நடத்தியவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் டெல்லியில் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதும் கூட, ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொள்வேன் என்று மோடி உறுதியளித்திருக்கிறார் என்றுதான் வைகோ கூறினார்.
ஆனால் பாரதிய ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றது முதல் தற்போது வரை நடந்தேறும் நிகழ்வுகள் அனைத்தும் வைகோ கொடுத்த நம்பிக்கைக்கு பெரும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன.
முதல் வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற உடனேயே மோடிக்கு முதல் வாழ்த்துகள் கிடைத்தது மகிந்த ராஜபக்சேவிடம் இருந்துதான். இதில் மிகவும் முனைப்போடு இருந்தவர் இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம்
ஆசியாவின் ராஜபக்சே..
அதனைத் தொடர்ந்து மோடியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசிலோ, ஆசியாவின் இன்னொரு ராஜபக்சேவாக மோடி வந்துவிட்டார். இருவரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள்.. இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவர்கள் என்றார்.
தமிழகம் இல்லாமல்..
அத்துடன் தமிழகத்தின் செல்வாக்கு இல்லாமலேயே பாஜக வெல்ல வேண்டும் என்று ராஜபக்சே விரும்பியது நடந்தேறிவிட்டது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார் பசில்.
பாஜக மவுனம்
ஆனால் இதுபற்றியெல்லாம் பாரதிய ஜனதா கட்சி கண்டுகொள்ளவே இல்லை. அலட்சியமாகவே இருந்துவந்தது.
ராஜபக்சேவுக்கு அழைப்பு
இதன் உச்சமாக மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்புகளின் தலைவர்களை அழைக்கிறோம் என்று பாஜக அறிவித்து அதற்கான வேலைகளையும் மேற்கொண்டு விட்டது.
சப்பைக்கட்டு
இதற்கு பாரதிய ஜனதாவோ, அண்டை நாடுகளின் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ண நடவடிக்கை.. இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறது பாஜகவோ..
பேரிடி..
ஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோவோ, இது பேரிடியாக இருக்கிறது.. துக்கமும் வேதனை தருகிறது என்கிறார்...
இருகரம் கூப்பி
நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.. ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என்கிறார்..
வருவதென்னமோ உறுதி..
ஆனால் வைகோவின் இந்த வேண்டுகோளை நரேந்திர மோடியோ பாரதிய ஜனதாவோ ஏற்குமா என்பது தெரியவில்லை. அப்படியான நிலையில் வைகோ என்ன செய்வார் என்ற கேள்வி எழுகிறது
சாஞ்சியில் போராட்டம்..
அன்று ராஜபக்சே மத்திய பிரதேச பாஜக அரசு அழைத்ததற்காக சாஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தி "சாஞ்சி கொண்டானாக" பேசப்பட்டவர் வைகோ.
டெல்லியில் போராட்டம்?
இன்று ராஜபக்சேவை வைகோவின் அதிகாரப்பூர்வ கூட்டணிக் கட்சியான பாஜக டெல்லிக்கே வரவழைத்திருக்கிறது. இப்போது வைகோ டெல்லிக்குப் போய் போராட்டம் நடத்துவாரா? அல்லது பேரிடியைத் தாங்கிக் கொண்டு இடிதாங்கியாக இருக்கப் போகிறாரா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி
கூட்டணியை விட்டு விலகல்?
பாரதிய ஜனதா தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் வைகோ தமது கொள்கையில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்த கூட்டணியில் இருந்து வெளியேறித்தான் ஆக வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.