வாடகை வீட்டுக்காரர்களின் கழுத்தை நெறிக்கும் கரண்ட் பில்!
சென்னை: பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது மாநில அரசு.
இந்த அதிர்ச்சி விலகும் முன்பாக சில தினங்களுக்கு முன்னர் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி மேலும் 'ஷாக்' கொடுத்துள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மின் கட்டண உயர்வு சொந்த வீட்டுக்காரர்களை விட வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்குத்தான் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இனி கரண்ட் பில் வாடகை வீட்டுக்காரர்களின் கழுத்தை நெறிக்கப்போகிறது என்பதுதான் உண்மை.
மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரம்... பயன்படுத்துபவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றது தமிழக மின்சார வாரியம்.
ஆனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள,எல்லா வாடகை வீடுகளிலும் சப் மீட்டர் வைத்தே பணம் வசூலிக்கின்றனர்.
அதாவது 100 யூனிட் வரை பயன்படுத்தியவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 என்றும் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணம் என்று அட்டவணையை அரசு நிர்ணயித்துள்ளது.
இன்று சென்னையில் வாடகை வீட்டில் ஒரு யுனிட்டுக்கு வசூலிக்கபடும் தொகை முறையே 6 முதல் 8 ரூபாய் வரை இடத்துக்கு தக்கவாறு வசூலிக்கின்றார்கள்... இதில் சொந்த வீட்டுகாரர் அவர் வீட்டுக்கு வரும் கரண்ட் பில் தொகையை கட்டுவதே இல்லை. அதான் வாடகை தாரர்களிடம் வசூலித்து கட்டிவிடுகின்றனரே அப்புறம் என்ன?
பொதுவாக வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் அட்வான்ஸ் வாங்கும் போதே மின்கட்டணம் யூனிட்டிற்கு 8 ரூபாய் என்றுதான் பேசி பீதியை கிளப்புவார்கள். வாடகை 10000 ரூபாய் என்றால் அதோடு கூடுதலாக மின்சாரத்திற்கு மட்டுமே ரூ.1500 செலவாகிவிடும்.
தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வீட்டின் உரிமையாளர்களும் ஒரு யூனிட் 15 ரூபாய் வரை உயர்த்துவதாக வாடகைதாரர்களிடம் சொல்லி விட்டனர். இதனால் இனி சாதாரண குடும்பங்களில் மின்கட்டணத்துக்கு மட்டுமே சில ஆயிரங்களை ஒதுக்கி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும் யாரும் புகார் கொடுப்பதில்லை. காரணம் வாடகைக்கு வீடு கிடைப்பது சென்னையில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் மின் கட்டணத்தை வேறுவழியின்றி வாடகைதாரர்கள் செலுத்தி வருகின்றனர்.
மின்கட்டண கொள்ளை பற்றி குரல் கொடுத்தாலோ வீடுகளை காலி செய்துதான் ஆகவேண்டும். எனவே பழகிய ஏரியா, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்கள் கேட்டதை கொடுத்து விட்டு மனஅழுத்தத்தோடு வாழ்க்கையை நடத்துகின்றனர் ஏழை மற்றும் நடுத்தரவாசிகள்.
விண்ணை முட்டும் விலைவாசியோடு மின்கட்டண உயர்வும் வாட்டி வதைப்பதால் சம்பாதிக்கும் பணமெல்லாம் வாடகைக்கும், மின்கட்டணத்திற்கும் கொடுக்கவேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர் நடுத்தரவாசிகள். மின்சாரம் என்கிற வார்த்தையை உச்சரித்தாலே இனி ஷாக் அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் வாடகை வீடுதாரர்கள் என்பதே உண்மை.