ராத்திரியில் திடீர் ரெய்டு.. அலறி அடித்து ஓடி வந்த விவேக்.. டென்ஷன் ஆன தினகரன்.. ஏன் இந்த பதட்டம்??
போயஸ்கார்டனில் ரெய்டு என்றவுடன் சசிகலா குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட பதற்றம் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை: போயஸ்கார்டனில் ரெய்டு என்றவுடன சசிகலா குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட பதற்றம் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களில் கடந்த 9ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நமது எம்ஜிஆர் பத்திரிக்கை மற்றும் ஜெயா டிவி அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெயா டிவியின் சிஇஓவும் சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் வீட்டிலும் 5 நாட்கள் விடிய விடிய சோதனை நடைபெற்றது. இதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல முக்கிய ஆவணங்கள் ஏராளமான சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
சசி குடும்பத்தில் விசாரணை
1800 அதிகாரிகள் அடங்கிய குழு சுமார் 190 இடங்கிளல் கல்யாண கோஷ்டிப் போல சென்று மெகா சோதனை நடத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
பூங்குன்றனையும் கையோடு..
இந்நிலையில் நேற்றிரவு 9 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனை கையோடு அழைத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பதறியடித்து ஓடிவந்த விவேக்
இரவு நேரத்தில் திடீரென நடத்தப்பட்ட ரெய்டால் சசிகலா குடும்பம் பீதியடைந்துள்ளது. ரெய்டு என்றவுடன் பதறியடித்துக்கொண்டு போயஸ் கார்டனுக்கு மனைவியுடன் ஓடி வந்தார் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்.
டிடிவி டிவிட்டரில் கண்டனம்
தனது உறவினர்களின் வீடு, நிறுவனங்கள் என 190 இடங்களில் சோதனை நடத்தியப் போது கூலாக கோ பூஜை செய்தார் டிடிவி தினகரன். ஆனால் இன்று போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துவிட்டனர் என்றதும் டிவிட்டரில் பதற்றத்துடன் பக்கம் பக்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
முகத்தில் ஈ ஆடவில்லை
நள்ளிரவில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தும் தனது கண்டனத்தை பதிவு செய்தார் டிடிவி தினகரன். எப்போதும் கூலாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர் இன்று ஒருவித பதற்றத்துடனேயே பதில் சொல்கிறார். முகத்தில் ஈ ஆடவில்லை.
பல்வேறு சந்தேகங்கள்
சசிகலாவின் அண்ணன் மகள்களான கிருஷ்ணப்பிரியாவும் ஷகிலாவும் போயஸ் கார்டன் பகுதிக்கு அவசர அவசரமாக படையயெடுத்துள்ளனர். சசிகலா குடும்பத்தினரின் பதற்றம், அவசரம், பதைபதைப்பு மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.