ஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை அதிரவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சி
தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சியானது பிற மாநிலங்களை அதிர வைத்துள்ளது. ஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை தங்களது கலாசார திருவிழாக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சென்னை: தமிழகத்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு புரட்சியானது அண்டை மாநிலமான ஆந்திரா தொடங்கி வடகிழக்கு அஸ்ஸாம் வரை அதிரவைத்துள்ளது.
தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் வீதியில் திரண்டு அறவழி அமைதி புரட்சியில் ஈடுபட்டனர். மாணவர்கள், இளைஞர்களின் அறப்போருக்கு பெற்றோரும் பேராதரவு தந்தனர்.
சென்னை மெரினாவில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போர்க்குரல் எழுப்பினர். இந்த மாணவர் புரட்சிக்கு சென்னை மீனவர்கள் பாதுகாப்பளித்தனர். வரலாறு காணாத யுகப் புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் முதலில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழக சட்டசபையில் நிரந்தர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிர வைத்த புரட்சி
தற்போது ஜல்லிக்கட்டு புரட்சியானது பிற மாநிலங்களையும் அதிரவைத்துள்ளது. ஒவ்வொரு தேசிய இனத்தின் கலாசார திருவிழாவிலும் பீட்டா தலையிட்டு தடை விதித்திருப்பதால் தற்போது தமிழகத்தைப் பின்பற்றி அந்த தடைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பளா
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கம்பளா எனும் எருதுவிடுதல் நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்டதைப் போல கம்பளா தடையை நீக்கவும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மங்களூருவில் போராட்டம்
கர்நாடகாவின் மங்களூருவில் கம்பளா தடையை நீக்கக் கோரி வரும் 28-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தவும் கம்பளா போராட்டக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தைப் போல பிரமாண்ட அளவில் இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மாட்டுவண்டி பந்தயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டுவண்டி பந்தயத்துக்கு தடை உள்ளது. இத்தடையை நீக்க வேண்டும் என்று சிவசேனா எம்பி சிவாஜிராவ் அதல்ராவ் பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மகாராஷ்டிரா கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக மக்கள் ஆதரவு தரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்ஸாமில் புல்புல் குருவி சண்டை
அஸ்ஸாமில் புல்புல் குருவிகள் சண்டைக்கு பீட்டாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய இனத்தின் கலாசார திருவிழாவாக புல்புல் குருவிகள் சண்டை கொண்டாடப்படுகிறது. தற்போது தமிழக எழுச்சியைத் தொடர்ந்து அஸ்ஸாமிலும் புல்புல் குருவிகள் சண்டை மீதான தடையை நீக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் கலாசார உரிமை மீட்பு கிளர்ச்சி இந்தியாவின் பிற தேசிய இனங்களையும் கிளர்ந்தெழ வைத்துள்ளது.