'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்
எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று இரண்டு வாரங்கள் கழித்து ஆர்கேநகர் மக்களை சந்தித்து தினகரன் நன்றி தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற்ற தினகரன் உடனடியாக மக்களை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 2 வாரங்கள் கழித்து தற்போது தன் தொகுதி மக்களை அவர் சந்தித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று அனைவரையும் மண்ணை கவ்வவைத்து அதிரடியான வெற்றியின் மூலம் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருப்பவர் தினகரன். அமோக வெற்றி பெற்ற அவர் தனது தொகுதி மக்களை உடனடியாக சந்தித்து, தனக்கு இந்த வெற்றியை தந்ததற்கு நன்றி தெரிவிப்பார் என கருதப்பட்டது.
ஆனால் வெற்றிப்பெற்றதிலிருந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் விமர்சித்து விட்டு, புத்தாண்டை குடும்பத்துடன் மன்னார்குடியில் கொண்டாடி விட்டு வந்த தினகரன் இன்று தன்னுடைய தொகுதி மக்களை சந்தித்தார்.
மக்களுக்கு உறுதிமொழி
அப்போது பேசிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், குடிநீர் வசதி செய்வேன், நன்றியுள்ளவனாக இருப்பேன் என பல வார்த்தைகளை கூறினார். தினகரன் பல வார்த்தைகளை பேசினாலும், அவர் ஏன் காலதாமதாக நன்றி தெரிவிக்க வந்தார் என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
சர்ச்சையை ஏற்படுத்திய ரூ. 20
20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு அதற்கான பணத்தை தினகரன் கொடுக்காததால் அதிருப்தியில் மக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி அனைவருக்கும் சேர வேண்டிய பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனால் தான் தினகரன் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டதாகவும் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
பணம் கேட்டு துரத்திய மக்கள்
மேலும் சில இடங்களில் மட்டும் முறையாக நடைபெற்ற பணப்பட்டுவாடா பல இடங்களில் முறையாக நடைபெறவில்லை என்றும், வெற்றி பெற்றவுடன் தினகரனின் நிர்வாகிகளே பணத்தை முறையாக வினியோகிக்காமல் அபகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 20 ரூபாய் தொடர்பான பணப்பட்டுவாடாவில் தினகரனின் ஆதரவாளர்கள் மூன்று பேர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழப்பத்துக்கு மத்தியில் ரவுண்டு
நிர்வாகிகளின் இந்த தகுடுதத்தம் தினகரனுக்கு தெரியுமா, அல்லது தெரியாதா என்று ஆர்கேநகர் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக நேரடியாக தினகரனிடம் போய் கேட்கவும் அவர்களால் முடியாது, தினகரனும் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக அனைவர் முன்னிலையிலும் கேட்க முடியாது. ஏனென்றால் தினகரன் பேட்டிப்படி அவர் தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு பணமே கொடுக்கவில்லையே.