வேல்முருகன் கட்சியை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன் கட்சி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். இந்நிலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜான் பாண்டியன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது. எங்கள் கட்சிக்கு உரிய மதிப்பு அளிக்காததால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குமாறு அதிமுக தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரேயொரு தொகுதியை அளிக்க தான் அதிமுக தலைமை முன்வந்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தங்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியும் இன்று விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.