'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.,வினரின் பஞ்சாயத்தில் பன்சாலியின் ’பத்மாவதி’ !
மெர்சலைத் தொடர்ந்து தீபிகாவின் பத்மாவதி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
டெல்லி : 'மெர்சல்' திரைப்படத்தைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து உள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது ராஜபுத்திர ராணி 'பத்மாவதி' குறித்த திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்தப்படத்தில் தங்களுடைய வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருவதாக, ராஜபுத்திர இன அமைப்பான கார்னி சேனா தொடர்ந்து பிரச்னைகளை கிளப்பி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
தாகப்பட்ட பத்மாவதி குழுவினர்
இந்த திரைப்படம் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட போது, அங்கு வந்த கார்னி சேனா அமைப்பினர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியைத் தாக்கி, அங்கிருந்த செட்டுகளையும், உபகரணங்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருந்தும் பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் தொடர் மிரட்டலுக்கு ஆளாகி வந்தனர்.
தலைநகரங்களில் போராட்டம்
இந்தப்படத்தை தடை செய்யக்கோரி, ராஜபுத்திரத்து இன மக்கள் வசிக்கும் ராஜஸ்தான், குஜராத்,உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தடைசெய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தலை வெட்டினால் ஐந்து கோடி
இந்நிலையில் இந்தப்படம் வெளியானால் தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என்றும், தலையை வெட்டினால் ஐந்து கோடி பரிசு என்றும் சில அமைப்புகள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. இதில் தற்போது சண்டிகர் பா.ஜ.க மூத்த தலைவர் சூரஜ்பாலும் இணைந்துள்ளார். தீபிகா, பன்சாலியின் தலைகளை வெட்டினால் 10 கோடி பரிசு என்று அறிவித்து உள்ளார்.
போராட்டத்திற்கு பாஜக ஆதரவு ?
உ.பி.,யில் இந்த படம் வெளியானால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று முதல்வர் யோகி மத்தி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். ராஜஸ்தான் அரசும் முறையான சென்சார் தேவை என்று சொல்லி இருந்தது. குஜராத்திலும் எம்.பிக்கள் பலர் இந்தப்படத்துக்கு தடை கோரி இருந்தனர். இவை எல்லாமே பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்.
ஏற்கனவே மெர்சல்
ஏற்கனவே பா.ஜ.க.,வினர் சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அதுபோல, தற்போது பத்மாவதி திரைப்படத்திற்கும் பா.ஜ.க ஆதரவு இயக்கங்கள் போராட்டம் நடத்துவது திரைத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தத்திரைப்படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.