மீண்டும் சென்னை அண்ணாசாலையில் விரிசல்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்! - வீடியோ
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வப்போது சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை 12 அடி பள்ளம் உருவானது. இன்று மீண்டும் அதேசாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் கடந்து ஐந்து வருடங்களாக மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதற்காக பூமிக்கடியில் நீண்ட பள்ளம் தோண்டி வருகின்றனர். இந்த பணியால், அவ்வப்போது சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கும்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று 12 அடிப் பள்ளம், அண்ணா மேம்பாலம் அருகே உருவானது. அதில் ஒரு அரசுப் பேருந்தும் காரும் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அன்று விடுமுறை தினம் என்பதால் அண்ணாசாலையில் அதிக போக்குவரத்து இல்லை.
இன்று மீண்டும் காலையில் அண்ணாசாலையில் 10 அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் வண்டியை மெதுவாக ஓட்டினர். மேலும் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.
சாலையில் உண்டான விரிசலை மெட்ரோ ஊழியர்கள் சிமெண்ட் பூசி சரிசெய்தனர். ஆனால், இதுவும் தாங்குமா என்பது கேள்விக்குறி.