நீளும் துன்பம்... மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை - வீடியோ
அந்தியூரில், தன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும் வாழையும் கருகுவதைக் கண்டு மனம் வெந்து, விவசாயி ராமலிங்கம் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமலிங்கம் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தால், கடும் வறட்சி நிலவி வருகிறது. 140 வருடங்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி நாசமாகின.
மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக 30,000 கோடி ரூபாய் கேட்டது தமிழக அரசு. ஆனால் கிடைத்ததோ வெறும் 1127 கோடி ரூபாய் மட்டுமே.
இந்நிலையில், கருகிவரும் பயிர்களை கண்டு மனமுடைந்தும், கடன் தொல்லையாலும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடந்திராத இந்த துயரம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் விவசாயிகள் 36ஆவது நாளாக சுட்டெரிக்கும் வெயிலில் போராடி வருகின்றனர். ஆனால் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும் தென்னை மரங்களும் வறட்சியால் கருகுவதைக் கண்டு மனமுடைந்து ராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.