நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்: தயார் நிலையில் மீட்பு குழுவினர்
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
ஏற்கனவே பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைடுத்து தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இங்கு முகாமிட்டுள்ளதால் மழை வெள்ளத்தால் சேதம் ஏற்படுவதை தடுக்க அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வருவாய்துறை, பொதுப்பணித்துறையினரும் வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.