இது ச்சும்மா டீசர்தாம்மா.. மே 4ம் தேதிதான் 'அக்னி' வருது.. 28ம் தேதி வரை அனலைக் கக்கப் போகுது!
சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. கடும் வெயிலுக்கு ஆறுதலாய் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இது, மே 29ம் தேதி வரை 26 நாட்கள் நீடிக்கும். இந்த காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும். அதாவது, குறைந்த பட்சம் 100 டிகிரியில் இருந்து 110 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும்.
ஆனால், தமிழகத்தில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விளாசி வருகிறது.இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரங்களில் திருச்சி, வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவானது. இருந்தபோதும் தொடர்ச்சியாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
இந்நிலையில், 'தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
கோடை மழை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல், மே, 5ம் தேதி வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். குறிப்பாக, மே, 4, 5ம் தேதிகளில் லேசான மற்றும் மிதமான மழை, அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜில்லென பெய்த மழை
நேற்று காலை, 8.30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், 3மிமீ கன்னியாகுமரி மாவட்டம், சித்தாரில், 2மி.மீ ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில் மேக மூட்டம்
சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகபட்சம், 100 டிகிரி பாரன்ஹீட்; குறைந்தபட்சம், 84.2 டிகிரி, பாரன்ஹீட் வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
சுட்டெரித்த வெப்பம்
தமிழகத்தில் நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக, சேலம், திருப்பத்தூரில் தலா 105.8 டிகிரி வெயில் பதிவானது. தர்மபுரி 105.26 டிகிரி, கரூர் பரமத்தி 104.72, திருச்சி 104.18, வேலூர் 103.82, மதுரை 103.28, பாளையங்கோட்ைட 103.1, கோவை 102.38, சென்னை 99.32 டிகிரி வெப்பம்பதிவானது.
அனலுக்கு ஆறுதல் மழை பெய்யுமா?
கடும் வெயில் காரணமாக, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதிய வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. வானிலை ஆய்வு மையம் சொன்னது போல மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும்.