தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் நர மாமிசம் சாப்பிடும் அகோரிகள் சுவாமி தரிசனமா? திடீர் பரபரப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி வேதஸ்தான கோவிலுக்கு அகோரிகள் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை தியாகராயர் நகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பதி ஏழுமலையான், ஆண்டாள் சிலை வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் பண்டிகை காலங்களில் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.
இதேபோன்ற பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் கடைபிடிப்பவர்களும் இங்கு வந்து தங்களது வேண்டுதல்களை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் 12 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. சில பூஜை பரிகாரங்கள் காரணமாக நடை சாத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்குள் அகோரிகள் சுவாமி தரிசனம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடைகளின்றி உடல் முழுவதும் திருநீறு பூசிய அகோரி ஒருவரும் அவரைத் தொடர்ந்து கோவி வேஷ்டி அணிந்த மற்றொரு அகோரியும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மனித மாமிசம் உண்ணும் அகோரிகள் தேவஸ்தான கோவிலுக்குள் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் குருக்கள் கோவிலை பூட்டியதாகத் தெரிகிறது. மேலும் கோவிலில் தீட்டுபட்டுவிட்டதாகக் கூறி கோவிலை சுத்தம் செய்வதற்காகவே கோவில் பூட்டப்பட்டதாகவும். அகோரிகள் வந்து சென்றதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் மக்கள் வழிபாட்டிற்காக திறந்த விடப்பட்டதாகத் தெரிகிறது.