விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.. போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
ஈரோடு: விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்தால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் கோரிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் கொங்கு எம்.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள்,பொறுப்பாளர்கள் உயர்மின் கோபுரத்தினால் பாதிப்புள்ளாகும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கூட்டு இயக்கத்தின் சார்பில் 15 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள 11 திட்டங்களை உயர்மின் கோபுரங்களாக நிறைவேற்றும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கைவிட்டு சாலையோரங்களில் கேபிள்கள் அமைத்து நிறைவேற்றிட முன்வர வேண்டுமென்றும், தற்போது அமைக்கப்பட்டுள்ள உயர்மின்கோபுரங்களை சம்பந்தப்பட்ட மின் தொடரமைப்பு நிறுவனங்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மறுப்புத் தெரிவித்தால் விவசாயிகளே அகற்றிக் கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கலந்து கொண்ட தென்னிந்திய நதிகள் விவசாயிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், புற்றுநோய்க்கும், மலட்டுத் தன்மைக்கும் காரணமாக விளங்கும் உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்றார். மேலும் அருகாமை மாநிலங்களைப் போல் சாலையோரத்தில் கேபிள் பதித்துக் கொண்டு செல்ல வேண்டும் அவர் என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி கூறுகையில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், கோரிக்கையை ஏற்க மறுத்தால் தமிழகம் முழுவதும் உயர்மின்கோபுரங்களை அமைத்து வரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்போவதாக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.