போலீஸ் பிடியில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளர் பீரங்கி வெங்கடேசன்!
திருவண்ணாமலை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பீரங்கி வெங்கடேசனை பிடித்துள்ள சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக கொடுக்கப்பட்ட அழுத்ததால் நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை கடந்த ஏப்ரல் 5ம் தேதி கைது செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பீரங்கி வெங்கடேசனை பிடித்துள்ள சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரின் முக்கிய நபரான வெங்கடேசன் அக்ரி கிருண்மூர்த்தியின் நிழல் உலக நடவடிக்கைளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் சார்பாக நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு பலமுறை சென்றுள்ள பீரங்கி வெங்கடேசன் அதிகாரியையும் அவரது மனைவியையும் மிரட்டியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அன்புவிடம் முத்துக்குமாரசாமியின் மனைவி வாக்குமூலமாக அளித்துள்ளதால் பீரங்கி வெங்கடேசன் இன்றோ, நாளையோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் பொறியில் துறையின் தலைமை பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனு நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஆனால் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கேள்விக்குறியாகியுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.