சிறையிலிருந்து வெளியில் வந்தார் “அக்ரி” - சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டார்!
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் இன்று பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நெல்லையில் வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 60 நாட்களுக்கு பிறகு பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அவர் வெளியில் வந்தார்.
நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் நாள்தோறும் கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
முன்னதாக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தினமும் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனை விதித்திருந்தது.
இதன்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை 10.10 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி அவர் கையெழுத்து போட்டார். பின்னர் 10.20 மணியளவில் தனது காரில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி புறப்பட்டு சென்றார்.