அதிகாரி தற்கொலை எதிரொலி: மா.செ. பொறுப்பில் இருந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ்!!
சென்னை: தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி அவர் வகித்து வந்த அண்ணா தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் வேளாண்மைத்துறையில் ஓட்டுநர்கள் நியனமத்திற்கு லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
இதனையடுத்து வேளாண்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக அண்ணா தி.மு.க. மேலிடம் தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர் வகித்து வந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும் மதுரை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக இருந்த அமைச்சர் செந்தூர் பாண்டியன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அமைச்சர் பா. வளர்மதி நியமிக்கப்படுவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.