முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு.. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பி ஏ ரகசிய வாக்குமூலம்
நெல்லை: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசு தரப்பு உதவியாளராக இருந்த பாண்டியன் சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முத்துக்குமாரசாமி விவகாரம் பூதாகரமாக உருவானதைத் தொடர்ந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறி போனது. அதோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக முன்னாள் அமைச்சர் ‘அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஜாமீனில் இருந்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசுத் தரப்பு உதவியாளராக இருந்த பாண்டியன் என்பவர் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதில் அவர், "வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அலுவலக ரீதியாக சில முறை அவரிடம் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், பணியாளர் நியமனம் தொடர்பாகவோ, பண விவகாரம் குறித்தோ அவரிடம் எதுவும் பேசியதில்லை.
அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் யாரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தார்களா என்பதும் எனக்கு தெரியாது' என வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பாண்டியனின் இந்த ரகசிய வாக்குமூலத்தால் முத்துக்குமாரசாமி வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.