அதிமுக நேர்காணலில் முக்கூர், அக்ரிக்கு அழைப்பு இல்லை... அப்போ சீட் இல்லை!
சென்னை: அதிமுகவில் இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட புதுமுகங்களுக்கே அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்ரமணியம் ஆகியோர் நேர்காணலுக்கே அழைக்கப்படவில்லையாம்
போயஸ் கார்டனில் ஜெயலலிதா நடத்தி வரும் நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 2வது வாரத்தில் அதாவது 11ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை தொடங்கி குமரி வரை 28 மாவட்டங்களுக்கு இதுவரை நேர்காணல் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான நேர்காணலில் கலந்துகொள்ள அதிமுக நிர்வாகிளுக்கு செவ்வாய்கிழமை திடீர் அழைப்பு வந்தது. அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனின் சொந்தத் தொகுதியில் இருந்து பாவை ரவிச்சந்திரன், தூசி மோகன், வழக்கறிஞர் சக்தி அண்ணாமலை ஆகியோரை அழைத்துள்ள தகவலால் அமைச்சர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்திக்கு அழைப்பு இல்லை. இதன்மூலம் முக்கூர் என்.சுப்பிரமணியன், அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள தகவல் உறுதியாகி உள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
கலசப்பாக்கம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனக்கும், தன் மகன் அரவிந்தனுக்கும் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருந்தார். மாவட்ட துணைச் செயலாளர் எல்.என்.துரை, ஒன்றிய சேர்மன் ஜெயராமன், செங்கம் ஒன்றிய சேர்மன் மதியழகன், துரிஞ்சாபுரம் சேர்மன் கோவிந்தராஜ், தொழிலதிபர் ரேணுகாதேவி ஆகியோரும் மனு அளித்திருந்தார்களாம்.
யாருக்கு சீட் கிடைக்கும்?
கலசப்பாக்கம் தொகுதிக்கு திருநாவுக்கரசு, தென்மாதிமங்கலம் துரை உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதேபோல திருவண்ணாமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத் தலைவர் அருணாசலம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வீ.சிவக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் பானுசந்தர் உட்பட பலர் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
குமாரசாமி தற்கொலை
வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியை பறிகொடுத்தார்.
தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் இழந்து சிறை சென்று திரும்பிய பிறகு தற்போது ஓரமாய் ஒதுங்கியிருக்கிறார். அக்ரிக்குப் பிறகு அந்தப் பதவியை வாங்கியவர் பெருமாள் நகர் கே.ராஜன். இப்போது இவருக்குத்தான் சீட் என்கிறார்கள்.
மறுக்கப்பட்ட வாய்ப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை அழைத்துள்ளதால் முக்கூர் சுப்பிரமணியனுக்கும், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பரிந்துரை செய்தவர்கள்.
எதிர்கோஷ்டிக்கு அழைப்பு
கலசப்பாக்கத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த துரைக்கு அழைப்பு வந்துள்ளது. அதேபோல, எதிர்கால அரசியல் நலனைக் கருதி தனது தூரத்து உறவினரான முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனைக்கூட அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டிங் எம்.எல்.ஏக்கள்
சட்டசபைத் தேர்தலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது என்னவோ உண்மைதான். 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் அட்ரஸ் இல்லாமல் போகப்போகிறார்கள். ஜெயலலிதா அறிமுகம் செய்யும் புதுமுகங்கள் வெற்றி வாகை சூடுவார்களா பார்க்கலாம்.