செய்யாறு அருகே 55 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்... உடந்தையாக இருந்த வேளாண் அதிகாரி அதிரடி சஸ்பென்ட்!
செய்யாறு: செய்யாறு அருகே வேளாண் விதை சுத்திகரிப்பு மையத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சமப்வத்தில் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வேளாண் அதிகாரி முரளி பிரபு அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
செய்யாறு அருகே தூளி கிராமத்தில் வேளாண் விதை சுத்திகரிப்பு மையம் உள்ளது. செய்யாறு வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இம்மையம் செயல்படாத நிலையில் பூட்டியே உள்ளது.
இம்மையத்தில் தேக்கு, செம்மரம், வேப்பமரம், புங்க மரம், சவுக்கு மரம் என சுமார் 150க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில் இதில் பல லட்சம் மதிப்பிலான தேக்கு, செம்மரம் போன்றவை வெட்டி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது.
இதனை அறிந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் விதை சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டனர். அப்போது மையத்தில் இருந்து மரங்களை வெட்டிக் கொண்டிருந்த கும்பல் தப்பிச் சென்றது.
இது தொடர்பாக மாவட்ட வேளாண் இயக்குநர், காவல்துறை மற்றும் செய்யாறு வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வேளாண் அதிகாரி முரளி பிரபுவை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது.