அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு - ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி அவருக்கு மதுரை ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது. அப்போது கோர்ட்டின் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். அதன்படி அவர் சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தான் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏயாக இருப்பதால் தொகுதி மக்களின் குறைகளை நேரில் சந்தித்து கேட்க முடியவில்லை என்றும், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்த வேண்டும்" என்றும் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஹைகோர்ட் ஏற்கனவே விதித்த ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்தி உத்தரவிட்டார்.