பண்படுத்தி உழுத எங்கள் நிலத்திலிருந்து ஒரு பிடி மண்ணை கூட விட மாட்டோம்.. திருவண்ணாமலை விவசாயிகள்
திருவண்ணாமலையில் குட்டி விமானம் மூலம் நிலஅளவீடும் பணி துவங்கியது
திருவண்ணாமலை: 8 வழிச்சாலையில் தற்போது உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம்.
பசுமை சாலை திட்டத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவது திருவண்ணாமலை மாவட்டம் தான். இந்த மாவட்டத்தில் மட்டும் 122 கிலோ மீட்டருக்கு பசுமை சாலை அமைய உள்ளது. அதனால் 5400 விவசாயிகளிடம் 860 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் துரித வேகத்தில் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் வாழ்தாரத்தை காக்க, அவர்களுக்கு வேலையோ, அல்லது மாற்று இடமோ வழங்குவதற்கான பரிசீலனைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.
ஐயோ.. பறிபோகிறதே
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நாட்டுக்காக உழைத்த என் நிலத்தை பறிக்கிறீர்களே என்ற வேதனையில் கொக்கரித்தார். எங்கள் நிலம்தான் எனக்கு எல்லாமே, ஐயோ... என்னை விட்டு பறிபோகிறதே என்று நெற்பயிர்களை கட்டி அணைத்து ஒரு பெண் அழுதாள்... மழையில்லாமல் பயிர் வாடி கருகி இருந்தபோது கூட அதை நாங்க வித்தது இல்லையே.. அந்த சாமிதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் என்று சொல்லி கடவுளிடம் மனு கொடுத்து முறையிட்டும் கதறினர்.
தடுக்க முடியவில்லை
இது போதாதென்று நிலம் கையகப்படுத்துதால் தற்கொலை முயற்சிகள், கிணற்றில் குதிப்பது, கழுத்து அறுத்து கொள்வது, மயக்கடைந்து விழுவது, மண்ணில் புரண்டு உருள்வது, என ஒவ்வொரு போராட்டங்களும் கொதிநிலையின் உச்சத்தில் உள்ளது. விவசாயிகளின் ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் ஒருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல, அதிகாரிகளின் நிலஅளவீடு பணிகளையும் ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
விமானம் மூலம் படங்கள்
இன்று கூட, மாவட்டத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளான செங்கம் ஆத்திப்பாடி, அயோத்தியாபட்டினம், கட்டமடுவு பகுதிகளில் ஹெலிகேம் எனப்படும் குட்டி விமானம் மூலம் அளவீடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வனப்பகுதிகளிலுள்ள விளைநிலங்களில் மரங்கள், வீடுகள், பயிர்கள், நீர்நிலைகள் எப்படி, எங்கே உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அதன் அடிப்பமைடயில் இழப்பீடு வழங்குவதற்காகவுமே இந்த குட்டி விமானம் மூலம் படங்களும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒருபிடி மண்ணைகூட தர மாட்டோம்
இதனிடையே 8 வழிச்சாலைக்கு எதிராக அரசாணை நகலை எரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரம்பரிய சொத்துக்களை அழித்து சாலை அமைப்பதை ஏற்க முடியாது என ஆவேசமாக தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, அவர்களை இழுத்துச்சென்று போலீசார் கைது செய்துள்ளனர். ஆக மொத்தத்தில்... எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை. பாடுபட்டு பண்படுத்தி உழுத எங்கள் நிலத்தில் இருந்து பசுமை சாலைக்காக ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம் என்று மாவட்ட மக்களின் ஆவேசமும் ஆதங்கமும் இன்னமும் ஓயாமல் தகித்து கிடக்கிறது.