சேலத்தில் 8 வழிச்சாலைக்காக இன்று போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளப்பு
சேலத்தில் 8 வழிச் சாலைக்காக இன்று போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்பட்டது.
சேலம்: சேலத்தில் 8 வழிச்சாலைக்காக இன்று விவசாய நிலம் போலீஸார் பாதுகாப்புடன் அளக்கப்பட்டது.
சேலம்- சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஆனால் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி என்று கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் நிலம் கையகப்படுத்துதல் பணி நடந்து வருகிறது.
விவசாயிகள் போராட்டம்
நிலங்களை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம், பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த விவசாய தொழில் ஆகியவை பாதிக்கக் கூடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு எட்டு வழி சாலை வேண்டாம் என கூறி வருகின்றனர்.
திமுக ஆர்ப்பாட்டம்
விவசாயிகளை மிரட்டி நிலங்களை பறிப்பதாக திமுக குற்றம்சாட்டி இன்று சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 192 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிலம் அளக்க
சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதில் விவசாய நிலங்களை அதிகாரிகள் அளப்பதை பார்க்கும் விவசாயிகளுக்கு மயக்கம் ஏற்படுகிறது. மேலும் சிலரோ கதறுகின்றனர். ஆனால் இவற்றை அரசு பொருட்படுத்தவில்லை.
கல் நடப்பட்டது
சேலத்தில் ஜெருகுமலை அடிவாரத்தில் உள்ள கெஜல்நாய்க்கன்பட்டியில் 8 வழிச்சாலைக்காக நிலம் அளக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்போது பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நிலம் அளக்கப்பட்டு கல் நடப்பட்டது.