கெயிலின் குழாய் பதிக்கும் வேலை.. உள்வாங்கும் விவசாய நிலங்கள்.. கண்ணீரில் விவசாயிகள்
விளைநிலங்கள் உள்வாங்கப்பட்டதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
திருவாரூர்: வேலையை காட்ட துவங்கி விட்டது கெயில் நிறுவனத்தின் விடாப்பிடி வேலை!
இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம்தான் இதற்கெல்லாம் காரணமே! கேரள மாநிலம் கொச்சியிருந்து பெங்களூரு வரை, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாயை பதிக்க முடிவெடுத்தது. 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த குழாயை பதித்து எரிவாயுவை கொண்டு செல்ல, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற்றது.
பலகட்ட போராட்டங்கள்
எரிவாயு குழாய்கள் நிலத்தில் ஒரு ஓரமாக பதிக்காமல், விவசாயிகளுக்கு சோறு போடும் விளைநிலங்களின் நடுப்பகுதியில் பதிக்க துவங்கினர். சாகுபடி நிலங்கள் எல்லாம் துண்டாடப்பட்டதை கண்டு விவசாயிகள் பதறிபோய் கதறினார்கள். இப்படி நடுவழியில் குழாயை போட்டுக் கொண்டதால், பாசன நீரை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறி உள்ளனர். குழாய்களை பதித்து எங்கள் வாழ்வை நாசமாக்கிவிடாதீர்கள் என்று கொந்தளித்து போராடினர். இதற்கு வைகோ போன்ற அரசியல்தலைவர்கள் ஓயாமல் விவசாயிகளுக்கு துணையாக இருந்தார்கள்.
நிலங்கள் உள்வாங்கின
இந்த குழாய் போடுற வேலையே வேண்டாம், வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்து கொண்டனர். ஆனாலும் கெயில் நிறுவனம் அதை காதிலே வாங்கி கொள்ளாமல் உள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒத்து ஊதி வருகிறது. கடைசியில் இப்போது குழாய் பதித்ததன் விளைவு திருவாரூரில் தொடங்கி விட்டது. குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் உள்வாங்கியிருக்கிறதாம்.
பிடிவாதமாக பதித்தனர்
கள்ளிக்குடி, அடியக்கமங்கலம், கானூர் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை குழித்தோண்டி குழாய்களை பதித்தனர். இங்கும் விவசாயிகள் போராடி பார்த்தனர். பிடிவாதமாக குழாய்களை அத்துமீறி பதித்தார்கள். நிலங்களை ஜெசிபி மிஷினை கொண்டு வெட்டினார்கள். பிறகு குழாய்களை பதித்தார்கள்.
விவசாயிகள் கண்ணீர்
சரி குழாய்களைத்தான் போட்டார்களே... தோண்டப்பட்ட பள்ளங்களை கூட மூடாமல் அப்படியே விட்டுட்டு சென்றிருக்கிறார்கள். இப்போது, கானூர் கிராமதில் 32 விவசாய நிலங்கள் உள்வாங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர். சம்பா சாகுபடியும் இவர்களால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்று அந்த விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். இழப்பீடாவது கொடுங்கள் என்று மனம் நொந்து போய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்... விவசாயிகளின் இந்த கண்ணீரும், வேதனையும் கெயில் நிறுவனத்துக்கு புரியாவிட்டாலும் மத்திய அரசுக்காவது புரியுமா?